(Reading time: 10 - 19 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

குறிப்புக்களைக் காட்டினான்.

  

கால் தேர்வில் எனக்கு நிறைய எண்கள் வரவில்லை. பாடுபட்டுத்தான் படித்தேன். ஆயினும் எதிர்பார்த்த பயன் இல்லை. காரணம் அவன் சொன்னதாகவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இனிப் பாடப் புத்தகங்களோடு குறிப்புகளையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் எதிர்பார்த்த பயனும் பிறகு கண்டேன்.

  

ஆனால் இப்படிக் குறுக்குவழி காண்பதில் மாலன் வல்லவனாக விளங்கினான். படிக்கும் முறையில் மட்டும் அல்லாமல், மற்ற வகைகளிலும் அவன் குறுக்கு வழியே நாடினான் என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

  

ஒரு நாள் மாலையில் நானும் அவனுமாகச் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றபோது வழியில் சாலையோரமாக ஒருவன், "இஷ்ட சித்தி குளிகை" என்று கூவிக்கொண்டிருந்தான். உடனே மாலன் அவனிடம் பயபக்தியோடு சென்று அதைப் பற்றிய விளக்கம் எல்லாம் கேட்டான். மாதத்தின் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் புறப்படும் நேரத்தில் நன்றாகக் குளித்து விட்டுக் கிழக்குப் பார்த்து நின்றபடியே வலக்கையில் இந்தக் குளிகையைக் கட்டிக்கொண்டால் எண்ணிய காரியம் எல்லாம் கைகூடும் என்று அவன் இன்னும் என்னென்னவோ சேர்த்துச் சொன்னான். அதன் விலை பத்தணா பத்துப் பைசா என்றான். மாலன் அந்த விலை கொடுத்து உடனே வாங்கினான். தடுத்தும் பயன்படாது என்று உணர்ந்து நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  

பல வகையில் கருத்து ஒற்றுமை உடைய நண்பன் ஒருவனைக் கண்டுபிடித்ததாக முதலில் மகிழ்ந்தேன். ஆனால் வரவர இவைபோன்ற சில வகைகளில் கருத்து வேறுபாடு மிகுந்து வருவது கண்டேன். அவனோ ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்தக் குறுக்கு வழிகளை நாடியதால், அவனைத் திருத்துவதும் எளிதாக இல்லை. உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது மாணவர்களிடையே இவ்வளவு வேறுபாடுகளைக் கண்டதில்லை. வளர்ந்து கல்லூரிக்கு வந்தபின், பலவகையில் வேறுபாடுகள் இருத்தலை உணர்ந்தேன். சந்திரனைத் திருத்த முடியவில்லை; மாலனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே முழுதும் கருத்து ஒற்றுமை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை என்று கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையைப் பற்றிய முதல் பாடமாக இருந்தது எனலாம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.