(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"அப்படியானால் நீ மட்டும் போய்வா"

  

"இல்லை, நீ வராததால் நான் மட்டும் ஏன் போகவேண்டும்? நானும் விடுதிக்கு வருவேன்."

  

"வேண்டுமானால், சிறிதுநேரம் சாலையிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வரலாம். அதற்கு வேண்டுமானால் வருவேன்."

  

இவ்வாறு நான் சொன்னதும், "சரி, அதுதான் வேண்டும். சும்மா பார்த்து வருவதற்குத்தான் போகலாம் என்று இருந்தேன். இல்லையானால், நாம் போவதால் நாட்டுக்குச் சுதந்திரம் வந்துவிடப்போகிறதா?" என்றான்.

  

நானும் மாலனும் கூட்டத்தின் பின் மெல்லச் சென்று சாலைப்பக்கம் சேர்ந்தோம். அப்போது ஒருவன் சந்திரனைக் கைப்பிடித்து ஊர்வலத்தின் முன்னணிக்கு இழுத்துச் சென்றதைக் கண்டேன். ஒரு துறையில் முன்நின்ற மாணவனை மற்றத் துறையில் பின்தங்கும்படி இளைஞர்கள் விடுவதில்லை. ஆகையால், சந்திரன் கூட்டத்தின் இடையே ஒதுங்கியிருந்தும், மற்றவர்களின் கண்ணில் பட்டபிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை.

  

திடீரென்று ஒரு பஸ் நிறைய இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் கைத்தடியும் துப்பாக்கியுமாக வந்து இறங்கினார்கள். தடிகளை இங்கும் அங்கும் சுழற்றினார்கள். சீழ்க்கை ஊதப்பட்டது, தடிகளைச் சுற்றுவதோடு நிற்காமல் மாணவர்களைத் தாக்கவும் தொடங்கினார்கள். "விடுதிக்கு போய்விடுவோம் வந்துவிடு" என்றான் மாலன். "இப்போது ஓடிப்போகக்கூடாது. இருந்து பார்த்துவிட்டுப் போவோம்" என்று மாலனுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து சில மாணவர்கள் மட்டும் பரபரப்பாக நடந்து தொலைவில் போய்விட்டனர். மற்றவர்கள் இங்கும் அங்கும் போவதுபோல் நகர்ந்துகொண்டிருந்தார்களே தவிர கலையவில்லை. "வந்தே மாதரம்! வந்தே மாதரம்!" என்ற குரல்கள் வானளாவின. மற்றுமொரு சீழ்க்கை ஊதப்பட்டது. கண்ணீர்ப்புகை விடப்பட்டது. அப்போதுதான் கூட்டம் சிதறத் தொடங்கியது. நானும் மாலனும் விடுதியை நோக்கிச் சென்றோம். கண்ணீர்ப்புகையும் அதற்குள் எங்கள் கண்களைத் தாக்கியது. கண்ணீர் வழிய நகர்ந்து கொண்டிருந்த எங்கள் மேல் தடிகள் பட்டன. மாலனுடைய முழங்காலிலும் அடிப்பட்டது; என்னுடைய இடது தோளிலும் பட்டது. மாலன், "அப்பாடா" என்று அடிப்பட்ட என்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.