ஆனால் மற்றவன் வரமறுத்தான். "இதோடு விட்டுவிடுங்கள். வேண்டுமானால், நான் சொன்னது தப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அப்படி யாருக்கும் நல்லதும் சொல்வதில்லை. விட்டுவிடுங்கள்" என்றான்.
வளர்ந்த மற்ற மாணவர்கள் அவனை நோக்கி, "அப்படி அல்ல. இந்த அளவில் விட்டுவிட்டால், உங்கள் இருவர்க்கும் மனக்கசப்பு இருந்துவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஆகையால் தயவு செய்து நாங்கள் சொல்வதைக்கேட்டு, எங்களுக்காக, விடுதியின் நன்மைக்காக எங்களோடு வரவேண்டும்" என்றார்கள்.
அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய வெள்ளைக் கதர் உடுத்து, அமைதி பொலியும் முகத்தோடு விளங்கினான். அவனிடத்தில் குற்றம் ஒன்றும் இருக்கமுடியாதே என்று எண்ணினேன். ஆனாலும் என்னோடு உடன் படித்த காரணத்தாலும், எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தவன் ஆகையாலும், சந்திரன் சார்பாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, சந்திரனுக்குப் பக்கத்தில் அவனுடைய வலக்கைபோல் பெருமித உணர்ச்சியோடு நடந்து சென்றேன். மாணவர்களும் கூட்டமாக வந்தார்கள்.
படிப்பகத்தில் உட்கார்ந்தவுடன், செயலாளர் சந்திரனைப் பார்த்து, "ஆத்திரம் இல்லாமல், கோபம் இல்லாமல், நடந்ததைச் சொல்லுங்கள்" என்றார். அந்தக் கதர் மாணவனைப் பார்த்து, "அதுவரையில் நீங்கள் கேட்டிருங்கள். ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிறகு சொல்லுங்கள்" என்றார்.
உடனே, கதர் மாணவன், "சொல்லாமலே இருக்க முடியும்" என்றான்.
சந்திரன் சொல்லத் தொடங்கியதும் நான் ஆவலுடன் கேட்டேன். "நான் சிறுநீர் அறைக்குப் போயிருந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். இந்த ஆள் உள்ளே நுழைந்தார். உடனே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டார். 'ஒன்றுக்குப்போனீர்களே, தண்ணீர் பிடித்துக் கொட்டினீர்களா?’ என்று என்னைக் கேட்டார். "நான் இல்லை என்றேன்" இவ்வாறு அவன் சொன்னதும் கதர் மாணவன் குறுக்கிட்டு "அல்ல, அப்படிச் சொல்லவில்லை. அது என் கடமை அல்ல என்று கோபத்தோடு கூறினார்" என்றார்.