Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 15 - மு. வரதராசனார்
விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், "நான் தேறிவிடுவேன்" என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, "செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?" என்றேன். "சோதிடம் கேட்டேன்" என்றான். "சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!" என்று சிரித்தேன். "குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்" என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, "நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா? ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்" என்றான். "அவரை ஏன் கேட்கவேண்டும்? நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா?" என்றேன். "என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்" என்றான்.
பிறகு, "அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன? அதை முதலில் சொல்" என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.
"இது எப்படி முடியும்? அழகான ரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்" என்றான்.
"ஐரோப்பியரும் அமெரிக்கரும் இல்லையா? நாமும் அப்படிப் பழகக்கூடாதா?"