Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 17 - மு. வரதராசனார்
அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் - வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் - தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம் என்று அவன் மேல் வெறுப்புத் தோன்றியது. பாக்கியம் வீட்டை விட்டுச் சென்றபின், அந்தக் குடும்பத்தில் அவருடைய தம்பி மனைவிக்கும் அவருக்கும் கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தம்பி அக்காவிடம் அன்பு இல்லாதவனாய் மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பதாகவும் அம்மா சொன்னார். அதனால் பாக்கியம் முன் போல் ஊக்கமாக இல்லை என்றும், மனத்தில் எந்நேரமும் வருந்திக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். கேட்டதும் எனக்கு இரக்கம் மிகுந்தது. "ஊமை போல் வாய் திறக்காமல் இருப்பவர்களை எப்போதும் நம்பக்கூடாது. அம்மா! எப்படி இருந்த அந்தத் தம்பி எப்படி ஆய்விட்டார், பார்த்தீர்களா? கடைசியில் தம்பிக்குப் பெண்பார்த்துத் திருமணம் செய்து குடும்பமாக்கி வைத்த அக்காவுக்கே துன்பமாக முடிந்ததே" என்று அம்மாவிடம் சொல்லி வருந்தினேன்.
"என்ன செய்வது? காலமே இப்படித்தான் மாறி வருகிறது. பாக்கியம் நல்ல பெண்! இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி வேலை செய்கிறாள். அவளுக்கு வேறு ஒரு திக்கும் இல்லை. அவளுடைய ஒரு வயிற்றுச் சோறுக்காக நேற்று வந்த ஒரு பெண்ணிடம் சிறுமைப்படுகிறாள்" என்று அம்மா சொன்னபோது என் உள்ளம் உருகியது.
நிலைமை அவ்வளவு வேகமாக மாறிவிடும் என்று நான் எண்ணவில்லை. முடிவுத் தேர்வுக்கு நன்றாகப் படித்து எழுதிவிட்டுச் சித்திரை மாதத்தில் ஊருக்குத் திரும்பியபோது, பாக்கியத்தின் தம்பி தன் மனைவியுடன் தனியே சென்று தனிக்குடும்பம் நடத்தும் செய்தியைக் கேள்விப்பட்டேன். ஒரு வகையில் அதுவும் நல்லதே என்று ஆறுதல் அடைந்தேன். நன்றிகெட்ட தம்பியையும் தம்பியின் மனைவியையும் வீட்டில் வைத்துக்கொண்டு துன்பப்படுவதைவிட, தந்தைக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டு தனியே வாழ்வதே நல்லது என்று எண்ணினேன். பாக்கியத்தின் வீட்டுக்கு நான் சென்றவுடன், அவர் இதைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டு, "அப்பாவுக்கு மட்டும் மனத்தில் கவலை என்ன செய்வது? ஒரே மகன் இப்படிக் கைவிட்டானே என்று நொந்து கொள்கிறார்." என்று சொன்னார். தனித்தனியே பிரிந்து