வாழ்வதே இந்தக் காலத்தில் ஒரு வகையில் நல்லது என்று ஆறுதல் மொழியாகக் கூறினேன்.
மற்றொரு நாள் அவர்கள் வீட்டில் அந்த அம்மையாருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாரா வகையில் என் திருமணத்தைப் பற்றியே பேசத் தொடங்கினார்.
"இந்தப் பங்குனி விழாவிற்கு வேலூரிலிருந்து அத்தையும் அத்தையின் பெண்ணும் வந்திருந்தார்கள் தெரியுமா" என்றார் பாக்கிய அம்மையார்.
"தெரியாதே அக்கா. அம்மாவும் சொல்லவில்லையே" என்றேன்.
"அந்தப் பெண் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறாள்."
"என் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது படிக்கவேண்டும். படித்து முடித்தபிறகு ஒரு வேலைக்குப் போய் அமர வேண்டும்."
"எல்லாம் தானாக நடக்கும், அத்தையும் உனக்கே பெண்ணைக் கொடுப்பதாக இருக்கிறார். அப்பாவும் அப்படிச் சொல்வதாகத் தெரிகிறது. அம்மா மட்டும் வாயைத் திறக்கவில்லை. உன் விருப்பம் போல் நடக்கட்டும்" என்றார்.
"எல்லாம் பிறகு பார்க்கலாம்; இப்போது ஒன்றும் அவசரம் இல்லை அக்கா."
"நானாகக் கேட்கிறேன், தம்பி. உன் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். கயற்கண்ணி கொஞ்சம் துடுக்காகப் பேசுவாள். அவ்வளவுதான். மற்றப்படி பொறுப்பான பெண். குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வாள். பாசம் உள்ளவள். பண்பு உள்ளவள். அவளை மணந்து கொண்டால் என்ன?" என்றார்.
"பொறுத்துப் பார்க்கலாம் அக்கா. இப்போது ஏன் அந்தப் பேச்சு?"
"என் தம்பிக்கு இப்போது புது இடத்தில் பெண் பார்த்து என்ன கண்டோம்? குடும்பம் இரண்டு ஆச்சு. அதற்காகத்தான் பயப்படுகிறேன், வேறொன்றும் இல்லை. கயற்கண்ணியாக இருந்தால்