சின்ன வயது முதல் பழகிய பெண், குணம் குற்றம் எல்லாம் தெரியும். கொண்டு திருத்திப் போகலாம். அதற்காகத்தான் சொன்னேன்."
பாக்கியம் இவ்வாறே சொன்னதைக் கேட்ட பிறகு என் மனம் பெருங்காஞ்சியில் இருந்த கற்பகத்தை - சந்திரனுடைய தங்கையைப் பற்றி - அடிக்கடி எண்ணியது. தேர்வு எழுதி முடித்துவிட்டுக் கவலை துறந்திருந்த என் மனத்தில் இந்த எண்ணத்தை அந்த அம்மையார் வளர்த்துவிட்டார். பெருங்காஞ்சிக்குப் போய்க் கற்பகத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் ஆவல் கொண்டேன். இரண்டொரு முறை போய் வரவும் முனைந்தேன். ஆனால், என்னவோ ஒரு வகைச் சோர்வு தடுத்துவிட்டது.
அப்பாவும் அம்மாவும் ஒருநாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வேலூர்க்கு அத்தை வீட்டுக்கு ஒரு முறை போய்வருமாறு சொன்னார்கள். பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டேன். மற்றொருநாள் அப்பா மட்டும் சொன்னார். இன்னும் சில வாரம் கழித்துப் போவதாகச் சொல்லிவிட்டேன். எங்கும் போக மனம் இல்லாமல் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி விடுமுறையைக் கழித்தேன்.
தேர்வின் முடிவு வந்தது. மாலனும் நானும் இரண்டாம் வகுப்பில் தேறியிருந்தோம். மகிழ்ச்சியோடு அவனுக்குக் கடிதம் எழுதினேன். பி.ஏ. வகுப்பில் சேர முடிவு செய்திருப்பதாக அவன் எழுதினான். நானும் தந்தையிடம் சொல்லி அவ்வாறே முடிவு செய்து அதற்கு உரிய விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன்.
இந்நிலையில் தங்கை மணிமேகலை கடுங்காய்ச்சலால் படுக்கையுற்று வருந்தினாள். காய்ச்சல் இரண்டு வாரம் மிகக் கடுமையாக இருந்தது. இரவும் பகலும் அம்மா அவளுடன் பக்கத்திலேயே இருந்து காத்துவந்தார். பாக்கியம் தந்தையார்க்கு உணவு சமைத்து இட்ட நேரம் போக மீதி நேரமெல்லாம் தங்கையின் பக்கத்திலேயே இருந்து வேண்டிய உதவிகள் செய்தார். காய்ச்சல் தன்னை மறந்து வாய் பிதற்றும் நிலை வரையில் சென்றது. தங்கை அப்போது அம்மா அக்கா என்ற சொற்கள் அடிக்கடி சொல்லக்கேட்டேன். தாய்க்கு அடுத்தபடியாகக் கருதத்தக்க அளவில் பாக்கியம் என் தங்கையின் உள்ளத்தை அன்பால் பிணைத்திருந்தார்.
வாய் பிதற்றும் நிலை மாறித் தன் உணர்வு வந்த பிறகு ஒருநாள் மாலையில் பாக்கியத்தின் வீட்டில் அலறல் கேட்டது. பாக்கியத்தின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாகச் செய்தி