வந்து அம்மா ஓடினார். நானும் ஓடினேன். "அம்மா! நடுத்தெருவில் விட்டுவிட்டாரே! தம்பி! அப்பா என்னை இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டாரே" என்று பாக்கியம் கதறினார். பக்கத்தில் நின்ற என் கால்களைக் கட்டிக் கொண்டு கதறி அழுதார். நான் அந்த அம்மையாரின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதேன். பட்டகாலிலேயே படுவதுபோல், துன்பம் அடுத்தடுத்து வந்து கெட்ட குடியையே கெடுப்பதை எண்ணிக் கலங்கினேன். தந்தையின் பிரிவைவிடக் கொடுமையாக இருந்தது தம்பியின் புறக்கணிப்பு. தந்தையின் மரணத்தின் போதும் அந்த ஆளின் நெஞ்சம் நெகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அயலார் வருவதுபோல் வந்தார்; அன்பு இல்லாமல் சடங்குகளைச் செய்தார்; கடமைக்காக, ஊருக்கு அஞ்சி நெருப்புச் சட்டியைத் தூக்கிச் சென்றார்.
அடுத்த மூன்றாம் நாளே அந்த ஆள் வீட்டு வாயிலை நெருங்காமல் நின்றுவிட்டார். சடங்குக்காக வந்தவர் சடங்கு முடிந்ததும் நின்று விட்டார். பாக்கிய அம்மையாரின் கண்ணீரும் கம்பலையும் நிற்கவில்லை. என் தாயின் மனம் ஆறுதல் பெறவில்லை. சொந்த மகளிடம் பரிவு காட்டுவது போல் பாக்கியத்திடம் பரிவு காட்டினார். அடிக்கடி சென்று கண்ணீரைத் துடைத்தார்.
மறு நாள் நான் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னைக்குப் புறப்படவேண்டியிருந்தது. அம்மா என்னைப் பார்த்து, "பாக்கியத்திடம் போய்ச் சொல்லிவிட்டுப் போப்’பா. நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம் என்று தேறுதல் சொல்லிட்டுப் போ. திக்கற்று நிற்கிறாள். பாசமெல்லாம் உன்னிடத்தில்தான். உடன்பிறக்காத குறைதான்" என்றார். அம்மாவின் கனிந்த சொற்களைக் கேட்டதும் என் உள்ளம் கரைந்தது. பாக்கியத்தைத் தேற்றி வரச் சென்ற நான், அவருடைய கண்ணீரைக் கண்டதும் விம்மி விம்மி அழுது விட்டு வந்தேன். அன்பு நிறைந்த நெஞ்சிற்கு அணை கட்ட முடியவில்லை.
----------
தொடரும்...