Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 18 - மு. வரதராசனார்
மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும் எனக்கும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்ததாகக் கூறமுடியாது. தொடர்பும் பழக்கமும் இடைவிடாமல் இருந்ததனால்தான் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று கூறவேண்டும்.
சந்திரனுக்கும் எனக்கும், ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தது. வாலாசாவில் படித்தபோது, அந்த உள்ளத்துணர்வோடு, தொடர்பும் பழக்கமும் இடையறாமல் இருந்தபடியால்தான், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவன் சென்னைக்கு வந்து படிக்கத் தொடங்கியபோது நான் ஓராண்டு வாலாசாவிலேயே படிக்க நேர்ந்தது. தொடர்பும் பழக்கமும் இல்லாமற் போகவே எங்கள் நட்புக் குன்றிவிட்டது.
மாலனும் நானும் கல்லூரியை விட்ட பிறகு, எங்கள் நட்பும் அப்படித்தான் ஆகுமோ என்று எண்ணினேன்.
ஆனால், சந்திரன் வாலாசாவில் இருந்தபோது என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். கல்லூரிக்கு வந்ததும் அவனுடைய மனம் மாறிவிட்டது. அவனுக்கு ஒருவகையான உயர்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த மனப்பான்மைதான் வேண்டும். உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ உள்ள இடத்தில் உண்மையான நட்பு ஏது? நான் அவனிடம் கணக்குக் கற்றேன்; உதவி பெற்றேன்; ஒரு முறை அவன் தேறிவிட நான் தவறிவிட்டேன்; அதனால் வகுப்பில் உயர்வு தாழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக மனநிலையிலும் வேறுபாடு ஏற்பட வேண்டுமா? அந்த வேறுபாடு ஏற்படாதிருந்தால் எங்கள் நட்புச் சிறிதும் மாறியிருக்காதே.
கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்த பிறகு இவ்வாறு அவனைப்பற்றி அடிக்கடி எண்ணங்கள் வந்தன. ஆனால் முன்போல் கவலையோ ஏக்கமோ இல்லை. சில நாட்களில்