மறந்தாற்போலவும் இருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய அறையின் சன்னல் பக்கமாகப் பழைய மாணவர் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் முந்திய ஆண்டுக்கு முந்திய ஆண்டில் விடுதியில் சின்ன அமர்க்களம் நடத்திய கதர் மாணவர் என்று தெரிந்துகொண்டேன்.
"நினைவு இருக்கிறதா? சாந்தலிங்கம்" என்றார்.
"ஆமாம்" என்று உள்ளே வருமாறு அழைத்தேன். உள்ளே வந்து உட்கார்ந்தார்.
"சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும் என்று உங்கள் சந்திரனுக்கும் எனக்கும் போராட்டம் நடந்ததே நினைவு இருக்கிறதா?"
"நன்றாக நினைவு இருக்கிறது. எங்கே இருக்கிறீர்கள்?"
"ஊரில்தான் இருக்கிறேன் நிலபுலங்களைப் பார்த்துக் கொண்டு."
"தொழில்?"
"நிலபுலம் பார்ப்பது தொழில் அல்லவா? உங்களுக்கு அது ஒரு தொழிலாகத் தெரியவில்லையா?"
"மெய்தான். வேறு வேலை-?"
"வேண்டா என்று இருக்கிறேன். இதுவே போதும்."
"காந்தீயம்."
"ஆமாம். விருப்பமில்லையானால் மனிதம் என்று சொல்லுங்கள்."
அவர் பழையபடியே இருந்தார். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது. சென்னையில்