சந்திரனைப் பார்த்தீர்களா?" என்றேன்.
"ஆமாம். அதைப்பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சந்திரனுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு போய் நான் சொல்லும் இடத்தில் தேடிப்பாருங்கள்."
"சரி"
என் உள்ளத்தில் சந்திரனைப் பற்றி இருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வரவேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அக்கறையுடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.
"நீலகிரி மலைக்கு ஒரு வேலையாகப் போகவேண்டியிருந்தது. உருளைக்கிழங்கு எப்படிப் பயிரிடுகிறார்கள் என்று பார்த்து வரப் போனேன். நண்பர் ஒருவரும் உடன் வந்திருந்தார். உபதளையில் அவர் ஒருவரைப் பார்ப்பதற்காக அழைத்துப் போனார். அங்கே ஒரு சின்ன தேநீர்க் கடை இருந்தது. பசியால் தேநீர் குடிப்பதற்காக அதனுள் நுழைந்தபோது சந்திரனைப் பார்த்தேன். தேநீர் குடித்துக் கொண்டிருந்த அவன் என்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டான். எனக்கு ஐயம் ஏற்பட்டது. சந்திரனோ வேறு யாரோ, எப்படிக் கேட்பது என்று தயங்கினேன், அவனுடைய உடையும் மாறியிருந்தது. காக்கிச் சட்டையும் காக்கிக் காலுறையும் உடுத்திருந்தான். தலைமயிர் கலைந்திருந்தது. மீசை தடிப்பாக இருந்தது. இங்கே இருந்த போது அவன் ஒருநாளும் அப்படி இல்லை. அவன் எதிரிலேயே போய் உற்றுப் பார்த்தேன். அவன் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு, விரைவாகத் தேநீர் குடித்து எழுந்தான். துணிந்து, "சந்திரா!" என்றேன். தன்னை மறந்து அவன் 'ஆ' என்றான். பிறகு ஏதோ தவறு செய்துவிட்டவன் போல், 'ஓ! நீங்களா? எங்கே வந்தீர்கள்? இதோ இருங்கள். வெளியே ஒருவர் காத்திருக்கிறார். அவருக்குச் சொல்லி விட்டு வருவேன்' என்று நடந்தான். போனவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. உடனே அங்கே தேநீர் தருவோனைப் பார்த்து, 'அந்த ஆள் சந்திரன் உனக்குத் தெரியுமா?' என்றேன். 'எனக்குத் தெரியாது. அதோ அவனுக்குத் தெரியும்' என்று சொல்லி அவன் இன்னொருவனைச் சுட்டிக் காட்டினான். அவனை மெல்ல அழைத்துக் கேட்டேன். சந்திரன் என்ன தொழில் செய்கிறான், எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டேன். அவன் எல்லாவற்றையும் சொன்னான். அதற்குப் பிறகு அவனுடைய பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன். அவர்களுடைய முகவரி தெரியாது. உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன். உங்களுடைய பெயர் தெரியாது.