கல்லூரியில் இருக்கிறார்களோ இல்லையோ என்று ஐயம் எழுந்தது. பணம் செலவானாலும் சரி, நேரில் போய்விட்டு வருவோம் என்று வந்தேன்" என்றார்.
அவருடைய இரு கைகளையும் பற்றிக் கொண்டு, "மிக்க நன்றி, இது அந்தக் குடும்பத்துக்கு மிகப் பெரிய உதவி. அவனுடைய அப்பா அம்மா கேள்விப்பட்டால் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இப்போதே தந்தி கொடுப்பேன்" என்றேன்.
"அவசரமே கூடாது. அவனோ ஒளிந்து வாழ்கிறான் என்று தெரிகிறது. இதனால் ஆர அமர முயற்சி செய்து தேடிப் பிடிக்க வேண்டும். இனிமேல் எங்கும் போக மாட்டான். அந்தக் கவலையே வேண்டா. ஒரு குடும்பமாகவே இருக்கிறான். ஒரு பிணைப்பு இருக்கிறது. உடனே விட்டுப் போக அவனால் முடியாது. கடிதம் எழுதுங்கள் போதும்" என்றார்.
குடும்பம், பிணைப்பு என்பவற்றைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஒருவகை அருவருப்புத் தோன்றியது. பழுத்த மாம்பழம் கிடக்கிறதே என்று மகிழ்ந்து கை நீட்டியபோது கொஞ்சம் அழுகல் என்று சொல்லக் கேட்டது போல் இருந்தது என் மனம். இருந்தாலும், பெற்றோருக்குப் பிள்ளை கிடைப்பான் அல்லவா, அதுவே பெரிய மகிழ்ச்சியாகும் என்று எண்ணினேன். "அங்கே யாரோடு வாழ்கிறான்? விட்டு வருவானா?" என்றேன்.
"எனக்கு நேரே தெரியாது. சொல்லக் கேட்டதுதான். அந்தத் தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்னான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவள் ஒருத்தியாம், முப்பது வயது இருக்குமாம். குழந்தை ஒன்றும் இல்லையாம். அவளோடு அன்பாக வாழ்க்கை நடத்துகிறானாம்" இவ்வாறு அவர் சொல்லிச் சிறிது நிறுத்தினார். பிறகு, "அன்பான வாழ்க்கையாக இருந்தால், அவளிடமிருந்து பிரிப்பது பாவம் அல்லவா என்று எண்ணினேன். அதனால் உங்களுக்குச் சொல்லாமலே இருக்கலாம் என்றும் கருதினேன். மறுபடியும் வேறு ஒருவகையில் இரக்கம் ஏற்பட்டது. அவளுடைய கணவன் ஒரு கொலைக்குற்றத்தில் அகப்பட்டுப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறானாம். அவன் சிறையிலிருந்து எப்படியோ வெளியே வந்து பார்ப்பானானால் முன்பின் எண்ணிப் பார்க்காமல் சந்திரனைக் கொன்றுவிட்டு மறுவேலை பார்ப்பான். அதை எண்ணியவுடனே எனக்கு எப்படியாவது சந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி ஏற்பட்டது" என்றார்.
"அய்யோ! அப்படிப்பட்ட குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?" என்று