வருந்தினேன். என்னுள் சிறு நடுக்கம் உணர்ந்தேன்.
"என்ன செய்வது? போனான், போன இடத்தில் ஒரு பெண்ணின் அன்பு கிடைத்தது. பிறகு என்ன விளையும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த அன்பை ஏற்றுக் கொண்டான். நேர் வழியில் போகாமல் கொஞ்சம் திரும்பினால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காலைப் பொத்தும்" என்றார்.
"என்ன தொழில் செய்கிறான்?"
"அதையும் கேட்டேன். தேயிலைத் தோட்டத்தில் முதலில் கூலி வேலைக்குத்தான் போனானாம். பிறகு அவனுக்கு ஆங்கிலப் படிப்பு இருப்பதாகத் தெரிந்து கொண்டு கணக்குப் பிள்ளை வேலை கொடுத்திருக்கிறார்களாம். அங்கேயே இருந்தாலும் முன்னுக்கு வரலாம். ஆனால்-"
"அய்யோ! அந்த ஆபத்தான வாழ்வில் இருக்கக்கூடாது. சிறையிலிருந்து கணவன் வெளியே வந்தால், தன் மனைவி மாறிவிட்டாள் என்பது தெரியாமல், சந்திரன் மேல் ஆத்திரம் கொண்டு ஏதாவது செய்துவிடுவான்."
"ஆமாம்." சிறிது அமைதியாக இருந்து பெருமூச்சு விட்டார். உடனே, "உயர்ந்த பண்பாடு உள்ள படித்த குடும்பமாக இருந்தால், மனைவி மனம் மாறிவிட்டாள் என்று அறிந்ததும் பேசாமல் அமைதியோடு திரும்பிவிடுவான். தாழ்ந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றால் உயிரைப் போக்குவது தவிர வேறு எதையும் எண்ண மாட்டார்கள். காரணம் அறியாமை, போலிமானம்" என்றார்.
"போய்த்தேடி அழைத்து, வருவதே பெரிய தொல்லைதான்" என்றேன்.
"அப்படி அல்ல. நீங்கள் வந்திருப்பது தெரியாதபடி போய்ப் பிடிக்கவேண்டும். நேரில் போன பிறகு அதற்கு வேண்டிய வழிகள் தோன்றலாம்" என்றார்.
அவர்க்கு மனமார நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று உண்ணுமாறு வேண்டினேன். உணவு முடிந்ததும், அவர் தம்முடைய முகவரியைத் தந்து, "நடந்தவற்றைத்