தெரியப்படுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டு விடை பெற்றார்.
உடனே என் அறைக்கு வந்து கடிதம் எழுதினேன். மூன்றாம் நாள் காலையே பெருங்காஞ்சியிலிருந்து சாமண்ணாவும் அந்த ஆசிரியரும் புறப்பட்டு விடுதிக்கு வந்தார்கள். சந்திரனுடைய புதிய குடும்ப வாழ்வு தவிர, மற்ற எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன். இருவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்று இரவே புறப்படவேண்டும் என்றார்கள். நானும் உடன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இசைந்தேன். பிறகுதான் ஊரில் அத்தையைப் பற்றியும் சந்திரனுடைய தாயைப் பற்றியும் கேட்டேன். தாய் மகனைப் பற்றிய கவலையோடு உணவும் உறக்கமும் இல்லாமல் வருந்தி இறந்துவிட்டதாக ஆசிரியர் சொன்னார். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. சந்திரன் கேள்விப்பட்டால் உண்மையாகவே வருந்துவானே என்றும், ஒருவன் தவறு காரணமாகப் பெரிய குடும்பமே துன்புற நேர்ந்ததே என்றும் கலங்கினேன்.
அவன் ஒரு குடும்பத்தில் பிணைப்புண்டிருப்பதை ஆசிரியர்க்கு மட்டும் தனியே சொல்லவேண்டும் என்று எண்ணினேன். தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். ரயிலில் சென்றபோது சாமண்ணா அயர்ந்து உறங்கினார். அவர் குறட்டைவிட்டு உறங்கிய நேரம் பார்த்து, ஆசிரியரிடம் சொன்னேன். அவர் திடுக்கிட்டவர்போல் என்னைப் பார்த்து, "அய்யோ! கொலைக்காரக் குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொண்டான்? தக்க சமயத்தில் வந்து சொல்லிய அந்த நல்லவர் உயிர்ப்பிச்சை அளித்த உதவி அல்லவா செய்திருக்கிறார்" என்றார். சிறிது நேரம் கழித்து, "சந்திரன் இவ்வளவு பொல்லாதவனாக - துணிச்சல் உடையவனாக - மாறுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வாலாசாவுக்கு அழைத்துப் போய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது எப்படி இருந்தான்! உனக்குத் தெரியுமே! மருண்டு மருண்டு பார்த்தான். இவனுக்குத் தைரியம் வரவேண்டுமே என்று கவலைப்பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில், ஒரு முறை ஊருக்கு வந்தபோது, என்னிடம் தனியே வந்து என் உடம்பில் வலு இல்லாமற் போகிறது. ஒரு மருத்துவரிடம் சொல்லி நல்ல மருந்து வாங்கிக் கொடுங்கள்" என்று கேட்டான். 'பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே'ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், 'முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்' என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே அவனுடைய குறையைத்