பல்சக்கர வண்டி புறப்பட்டு மலையை நோக்கி ஏறியவுடன் புதிய புதிய காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் தோன்றின. நாங்கள் அந்த வழியில் அதற்கு முன் சென்றதில்லை. மலைமேல் ரயில் செல்வதே எங்களுக்கு ஒரு புதுமையாக இருந்தது. நீலகிரி மலையில் வளமான காட்சிகளும் புதுமையாக இருந்தன. அவற்றை நானும் ஆசிரியரும் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தோம். ஆனால் சாமண்ணா எங்கள் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, அவர் முகத்தைப் பார்த்தபோதெல்லாம் எங்கள் மகிழ்ச்சி குன்றியது. அந்த மலையின் வளத்தைக் கண்டு வியப்படைந்தபோதெல்லாம், என்னை மீறி ஏதேனும் சொல்ல வாய் திறந்தேன். சாமண்ணாவின் துயரம், என் ஆர்வத்திற்கு தடையாக நிற்க, சொல்வதைச் சுருங்கச் சொல்லி முடித்தேன். எத்தனையோ மலைகளை எங்கள் ஊர்ப்பக்கம் கண்டிருக்கிறோம். ஆனால் மரம் செடி கொடிகள் தழைத்து வளர்ந்த மலைகள் காடுகள் செழித்தோங்கிய மலைகள்-விண்ணை முட்டி நின்ற மலைகள் - ஒன்றோடொன்று இணைந்து உயர்ந்து செல்லும் அழகை அதுவரையில் கண்டதில்லை. கண்ட இடமெல்லாம் வளப்பம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. பயிரிடாமல் அங்கங்கே சரிவுகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள வாழை மரங்களை ஆசிரியர் காட்டினார். அப்போது மட்டுமே சாமண்ணா தலை நீட்டி எட்டிப் பார்த்தார்.
மலையின் இயற்கை வளம் ஒருபுறம் இருக்க, பல்சக்கர ரயில் வண்டி ஆடி அசைந்து மலை ஏறிச் செல்வது தனி இன்பமாக இருந்தது. அங்கங்கே மலைக் குடைவுகளின் வழியாக வண்டி சென்றபோது, சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடக்க, சிறுவர்கள் ஓ என்று கூச்சலிட்டது வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை நீண்ட மலைக்குடைவின் வழியாக வண்டி சென்றபோது நானும் என்னை அறியாமல் சிறுவர்களோடு சேர்ந்து கூச்சலிட்டேன். குடைவைக் கடந்ததும் ஒளியில் ஆசிரியர் முகத்தைக் கண்டேன். அவருடைய முகமும் சிறுவர்களின் முகம் போலவே புதுமை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் சாமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. பேரொலி கேட்டு வெளியே தலைநீட்டிக் கீழே பார்த்தேன். கானாறு ஒன்று நீர் நிரம்பி அலை புரண்டு கற்பாறைகளில் மோதி ஓடியது கண்டேன். மறு பக்கமாகப் பார்த்தேன். மலைமேல் உயரத்திலிருந்து பெரிய அருவி தூய வெண்ணிறமாக விழுந்து ஓடி வருவதைக் கண்டேன். அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்டி அங்கேயே நின்றால் நெடுநேரம் கண்டு மகிழலாம் என்ற வேட்கை உண்டானது. ஆனால் இயற்கையின் மாறாத நிகழ்ச்சிகள் போல் வண்டி சிறிதும் நிற்காமல் ஒவ்வொரு பல்லாக ஏறி ஆடி அசைந்து சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரிய அருவியே மற்றொரு பக்கத்தில் ஆறாக ஓடிச்