செல்கிறது என்பதை மறுபடியும் இப்பக்கமாகக் கண்டபோது உணர்ந்தேன்.
எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்த போது சாமண்ணா மேலாடையை விரித்து முக்காடு இட்டுப் போர்த்துக்கொண்டார். அப்போதுதான் காற்று மிகக் குளிர்ந்து வீசுவதை நான் உணர்ந்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் வெப்பமான சூழ்நிலையை விட்டு, மிகக் குளிர்ச்சியான பகுதிக்கு வந்து விட்டதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் வெப்பமும் தட்பமும் வறட்சியும் வளமும் அடுத்தடுத்து விளங்குவதையும், மனிதன் விரும்பக்கூடிய இயற்கையழகுகள் எல்லாம் அமைந்து விளங்குவதையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். வெயிலே காணாத தட்ப நாடும் வெறுக்கத்தக்கது. தட்பமே இல்லாத கொதிப்பான பகுதியும் வெறுக்கத்தக்கது. எங்கும் மலையாகவும் காடாகவும் இருந்தாலும் பயன் இல்லை. கடல்வளம் முதல் மலைவளம் வரையில், சித்திரையின் வேனில் முதல் மார்கழியின் பனிவரையில், தொண்டை நாட்டின் சிறுவறட்சி முதல் நீலகிரியின் பெருவளம் வரையில் எல்லாம் கலந்து மனித வாழ்வை இனிக்கச்செய்யும் பெருமை தமிழ் நாட்டுக்கு இருப்பதை எண்ணிப் பெருமிதம் உற்றேன். இயற்கை அன்னை இங்கே வெறுக்கத்தக்கவளாகவும் இல்லை; சலிப்புறத் தக்கவளாகவும் இல்லை; மாதந்தோறும் மாறிவரும் சிறுவர்களின் பலவகை விளையாட்டுக்கள் போல், இடந்தோறும் பருவந்தோறும் மாறி மாறிப் பலவகையாய் நின்று மக்களை மகிழ்விக்கின்றாள். இங்கே தாங்க முடியாத கடுமையான குளிரும் இல்லை; தடுக்கமுடியாத கொடுமையான வெயிலும் இல்லை; பெருமழை பொழிந்து வெள்ளத்தால் நாட்டை அழிப்பதும் இல்லை; மழைத்துளியே இல்லாமல் வறட்சியால் பாலையாக்குவதும் இல்லை. வன்மையும் மென்மையும் குறிலும் நெடிலும் ஒத்து அமைந்து ஒலியுறுப்புகளுக்கு அளவான உழைப்புத்தந்து விளங்கும் அருமைத் தமிழ் மொழி போலவே, எங்கள் தமிழ் நாடும் தட்பமும் வெப்பமும் வறட்சியும் வளமும் எல்லாம் அளவு கடவாமல் அமைந்து மக்களின் வாழ்வுக்கு உரிய நானிலமாகத் திகழ்கிறதே என எண்ணி பெருமகிழ்வு எய்தினேன். இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர். குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளியவேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பியபோதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற