நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். 'ஏதாவது ஒரு கட்டு ஏற்படுத்தி விட்டால் சரியாய்ப் போகும்' என்று அந்தத் தேநீர்க் கடையின் இளைஞன் சொன்னது என் நினைவுக்கு வந்தது.
ஆவணி மூன்றாம் நாளிலேயே என் கையில் திருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது, "சந்திரன் - வள்ளி" என்று மணமக்களின் பெயரைப் படித்தவுடனே என் உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது. சந்திரனைக் கல்லூரிக்கு அனுப்பியதற்கு மாறாக, அப்போதே ஒரு திருமணம் செய்து மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இவ்வளவு தொல்லையும் இருந்திருக்காது என்று கிண்டலாகப் பேசினான் மாலன். "நான் சொல்வதற்காக வருத்தபடாதே, யாருக்கு என்ன பசி என்று அறிந்து உணவு இடவேண்டும். தன் மகனுக்குக் கல்விப் பசியை விடக் காமப் பசி மிகுதி என்று அவனுடைய தந்தை அப்போது தெரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொண்டாரே, அது போதும்" என்றான்.
"சந்திரனுக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்கிறாயா?" என்றேன்.
"நான் அப்படிச் சொல்லவில்லை, அதுவும் உண்டு ஆனால், அதைவிடப் பெண்ணுறவு தேடுவதில் ஆர்வம் மிகுதி என்று சொன்னேன்" என்றான் மாலன்.
பேச முடியாமல் அடங்கினேன்.
"சென்ற ஆண்டில் வேலூரிலிருந்து வந்த பேராசிரியர் அருளப்பர் ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவு இருக்கிறதா? அருமையான கருத்து" என்றான்.
"எது என்று எனக்கு நினைவு வரவில்லை. மறந்து விட்டேன், சொல்" என்று கேட்டேன்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.