(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

சந்திரனுடைய திருமண நாளன்று எனக்குக் கல்லூரியில் கால் ஆண்டுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆகையால் எப்படித் திருமணத்துக்குப் போவது என்று திகைத்தேன். மாலனை அறிவுரை கேட்பது போல் கேட்டேன்.

  

"கூட்டைவிட்டு வெளியே வருவது என்றால், பெண்ணுறவு தேடி அலைவதற்கு மட்டும் சொன்னது அல்ல. பொதுவாக எந்த வேறு வேலைக்கும் பொருந்தும். திருமணம் குடும்பக் கடமை. அதை உன் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளட்டும், நீ போக வேண்டியதில்லை" என்றான்.

  

"நண்பன் அல்லவா? அவனுடைய வாழ்வில் ஒரு சிறந்த நாள்."

  

"இருக்கட்டும். நீ அன்றைக்கு இங்கிருந்தே அவனுக்காக நன்மை எண்ணு. நீ இங்கிருந்தால், உன் தேர்வும் எழுதலாம், அவனுக்குத் தீமை இல்லை. நீ போனால், உனக்குத் தீமை, அவனுக்கு ஒரு பயனும் இல்லை. இரண்டில் எது சிறந்தது? பற்றில்லாமல் நடுநிலையாக எண்ணிப்பார்" என்றான்.

  

தராசில் இரண்டு தட்டுகளில் வைத்து எடைபோட்டுக் காட்டுவது போல் இருந்தது. போவதில்லை என்று ஒருவாறு முடிவு செய்தேன்.

  

ஆனால், மாலன் என் அறையை விட்டுப் போன பிறகு, மனம் ஊசாலாடத் தொடங்கியது. போகாவிட்டால் சந்திரன் என்ன நினைப்பான், சாமண்ணா என்ன நினைப்பார் என்று வருந்தியது. போவதால், என்னுடைய காலமும் முயற்சியும் அவை போலவே ஓரளவு அவனுடைய காலமும் முயற்சியும் வீணாவது தவிர வேறு பயன் இல்லேயே; போகாமல் இருந்தால், காலமும் முயற்சியும் தேர்வுக்குப் பயன்படுமே என்றும் எண்ணினேன். திருமண அழைப்பு மட்டும் அனுப்பினானே தவிர, சந்திரன் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதவில்லையே, நீலகிரியிலிருந்து வந்தபிறகு ஒரு வரியும் எழுதவில்லையே என்று சிறிது வருந்தினேன். ஒரு வேலையும் இல்லாத அவன் சிறிது நேரம் செலவிட்டு ஒரு கடிதம் எழுதவில்லையானால், அவனுக்காக நான் ஏன் காலத்தையும் முயற்சியையும் வீணாக்க வேண்டும்? ஊருக்குக் கடிதம் எழுதினால் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் போய்ப் பார்த்து வரட்டும் என்று அமைதியானேன்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.