அடுத்த வாரம் ஊரிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவர்களுக்குத் திருமண அழைப்பே வரவில்லை என்றும், யாரும் திருமணத்துக்குப் போகவில்லை என்றும் குறித்திருந்தார்கள். எனக்கு அது வியப்பாக இருந்தது. சந்திரன் மறந்திருக்கலாம்; புறக்கணித்திருக்கலாம்; அது அவனுக்கு இயற்கை. சாமண்ணா எப்படி மறந்தார் என்று வருந்தினேன். மனைவியை இழந்த அவர் பலவகையிலும் மனம் நொந்தவராக இருப்பதால், எத்தனை கடமைகளை நேரில் கவனிக்க முடியும் என்று எண்ணி ஆறுதல் பெற்றேன்.
அடுத்த ஆவணி தொடக்கத்தில் மாலன் என்னுடைய அறைக்கு வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்து, திடீரென்று "எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது; ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றான்.
எனக்கு வியப்பாக இருந்தது. "என்ன அவசரம்? இன்னும் ஆறு மாதம் பொறுத்தால், பி.ஏ. தேர்வு எழுதி முடித்து விடலாமே. அதற்குள் ஏன்? கூட்டில் வளரவேண்டிய காலத்திற்கு முன்பே வெளியே தலை நீட்டலாமா?" என்றேன்.
என்னுடைய குத்தலை உணர்ந்துகொண்ட மாலன் "இது குஞ்சு தானாகவே வெளியே போய்க் கெடுவது அல்ல. தாய்க் குருவி பொறுப்போடு பார்த்துக் கொண்டு தன் குஞ்சை வெளியே அழைத்துப் போவது இது" என்றான்.
"எப்படியும் கெடுதல்தானே? இறக்கை நன்றாக முளைத்து வரவேண்டிய பருவம் அல்லவா,"
"முதல் கடிதத்திற்கு வேண்டா என்றுதான் எழுதினேன். ஆனால் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான சோதிடர் இந்த ஆவணியில் முகூர்த்தப் பொருத்தம் இருப்பதாகவும், குருதசை பலமாக இருப்பதாகவும், இன்னும் நான்கு வாரத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் தெற்குத் திசையில் அல்லது தென்மேற்குத் திசையில் பெண் வீடு அமையும் என்றும், ராசிநாதனை எடுத்துப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாராம்" என்றான்.
எனக்குத் தோன்றிய சிரிப்பை அடக்கிக்கொண்டே "இன்னும் என்ன எழுதியிருக்கிறார்கள்?" என்றேன்.