"ஒரு நல்ல குடும்பத்தில் பெண் பார்த்திருக்கிறார்களாம். கொஞ்சம் தென்மேற்கே உள்ள ஊராம். லக்கினாதிபதி அந்த இடத்தில்தான் பலமாகப் பார்க்கிறானாம். பெண்ணுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கிறதாம். ஆனால் கேதுவின் பார்வை எட்டில் இருப்பதால், இல்வாழ்க்கையில் கொஞ்சம் கசப்பும் இருக்குமாம். நாகபூசை செய்தால் சரியாகிவிடுமாம்" என்றான்.
என்னால் முன் போல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன்.
"நீ இப்போது இப்படித்தான் சிரிப்பாய். உனக்கு ஒரு காலம் வரும். அப்போது நம்புவாய். அதற்கு ஒரு கிரகம் வந்து அமையும்" என்றான்.
"நீயே முக்கால் சோதிடனாக இருக்கிறாயே" என்று சொல்லிச் சிரித்தேன்.
"என் தகப்பனார்க்கு நன்றாகத் தெரியும். அவர்க்குச் சில நாட்களில் சளி பிடிக்கும். உடனே கிரக பலன் பார்ப்பார். அவர் சொல்வது சரியாக இருக்கும். புதனுடைய பார்வை இருந்தாலோ என்னவோ சொல்வார். சூடான உணவுப் பொருள்களையே சாப்பிட்டாலும் உடம்பில் சீதளம் ஏற்படுமாம். சில கிரகத்துக்கு, எவ்வளவு சீதளமான பொருள் சாப்பிட்டாலும் உடம்பு சூடாகிவிடுமாம். அதில் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது."
"எவ்வளவு இருந்தும் என்ன பயன்? இறக்கை நன்றாக வளர்வதற்கு முன்னமே குஞ்சு கூட்டைவிட்டு வெளியே வரப்போகிறதே."
"அது நம் கையிலா இருக்கிறது? கிரக பலனை யார் என்ன செய்ய முடியும்,"
"இதே காரணத்தை சந்திரனுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? அவன் கெட்டது கிரக பலனால் என்று சொல்லாமல், அவனையே பழிக்கிறாயே! உனக்கு ஒரு காரணம், அவனுக்கு ஒரு காரணமா?"
மாலன் சிறிது தடுமாறினான்.
"போகட்டும். எண்ணிப்பார். இன்னும் ஆறுமாதம் கடத்தினால் உனக்கும் நல்லது;