(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

சிறிது நேரத்தில் என்னைப் பிடித்துக் குலுக்கிய அந்த பேய் விட்டு நீங்கியது. என் நிலைமை எனக்கே விளங்கியது. மாலன்மேல் ஒரு குற்றமும் சொல்ல முடியாது. என் மனம் கற்பகத்தை விரும்புவது அவனுக்கு எப்படித் தெரியும்? தான் மணக்கப்போகும் பெண் அந்த கற்பகம்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவன் முழுப் பொறுப்பையும் கிரக பலனிடத்தில் ஒப்படைத்து விட்டிருக்கும்போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? கற்பகத்தின் மேலும் சினம் கொள்வதில் பயன் இல்லை. அவளைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்வதாகச் சொல்ல முடியாது. பெண்ணைக் கேட்ட பிறகு திருமணப் பேச்சைப் பேசுவது என்ற நாகரிக நிலை இன்னும் பெரும்பாலான குடும்பங்களில் வரவில்லையே. சந்திரன் தான் என்ன செய்வான்? அவன் குடிகாரனுடைய மனநிலையில் இருக்கிறான். குடிகாரனுக்குத் தன் வழியே தெரியாதபோது, பிறருக்கு எப்படி வழிகாட்ட முடியும்? நான் இதுவரையில் என் விருப்பத்தை ஒருவரிடமும் புலப்படுத்தவில்லையே. இனி மேலாவது புலப்படுத்த முடியுமா? அது மாலனுக்குக் குறுக்கே நிற்கும் முயற்சியாக இருக்கிறதே.

  

அன்று வகுப்புக்கு போகவில்லை. கல்லூரிக்குப் போகும் நேரத்தில் மாலன் வந்து அழைத்தான். "நீ முன்னே போ. நான் சிறிது நேரம் கழித்து வருவேன்" என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டேன். எங்கேனும் ஒரு பூங்காவுக்குச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழலாம் என்று எழுந்தேன். செனாய் நகரில் திரு.வி.க. பூங்காவுக்குச் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்தேன் திரும்பத் திரும்ப முன்போலவே வெறுப்பும் சினமும் குழப்பமும் ஆறுதலும் மாறி மாறி வந்தன. என்னுடைய கலக்கம் எனக்கே பைத்தியக்காரத் தன்மையாகப் புலப்பட்டது. மாலையில் கடற்கரைக்குச் சென்றேன். நெடுந்தொலைவில் யாரும் நெருங்காத இடத்தில் ஒரு மூலையில் தனியே உட்கார்ந்தேன்; சோர்ந்து படுத்தேன். கிழவனும் கிழவியுமாய் இருவர் அந்தப் பக்கமாக வந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே வந்து தொலையவேண்டும் என்று வெறுப்போடு எண்ணினேன். வந்தவர்கள் இருவரும் ஒருபுறம் உட்கார்ந்து பழைய குடும்பக் கதையைப் பேசத் தொடங்கினார்கள். இன்னும் யாராவது வந்து சேர்ந்தால் அப்புறம் எழுந்து போகலாம். அது வரையில் இங்கேயே இருக்கலாம் என்று படுத்திருந்தேன். பேசிக் கொண்டிருந்த கிழவன் ஒரு கனைப்புக் கனைத்து, "சேச்சே! சுத்தப் பைத்தியங்கள்! எவ்வளவு பெரிய உலகம்! எத்தனை பிள்ளைகள் எத்தனை பெண்கள் பிறந்தது பிறந்தபடியே இருக்கிறார்கள்! இவனுக்கு என்று ஒரு பெண் கிடைக்க மாட்டாளா?" என்றான். கிழவி உடனே, "இந்த உலகத்தில் பெண் பஞ்சமும் இல்லை, ஆண் பஞ்சமும் இல்லை" என்றாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.