"சந்திரன்தான் உன் மைத்துனன் ஆகப்போகிறானே" என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன். பிறகு வருந்தினேன்.
"என்ன உளறுகிறாய்? எனக்குத் தங்கையும் இல்லை; அவனுக்குப் பெண் கொடுக்கப்போவதும் இல்லை."
"நீ அவனுக்குக் கொடுக்காவிட்டால் அவன் உனக்குக் கொடுக்கப் போகிறான்."
மாலன் திகைத்து நின்றான். மூக்கின் அருகே சுட்டு விரலை மடித்து வைத்து என்னவோ எண்ணினான். "உனக்கு ஏதாவது கடிதம் வந்ததா?"
"ஆமாம், பிறகு சொல்வேன்" என்றேன்.
"சொல், சொல்" என்று என்னைத் துளைக்கத் தொடங்கினான். மேசை மேல் இங்கும் அங்கும் தேடினான். "எங்கே கடிதம்? உண்மையைச் சொல்" என்றான்.
சாமண்ணாவின் கடிதம் பற்றிச் சொன்னேன். அமைதியாய்க் கேட்டான்.
"பெண் நல்ல பெண்தானா? நீ பார்த்திருப்பாயே? குணம் எப்படி?" என்றான்.
"அதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறாய்? உங்கள் வீட்டுச் சோதிடரைக் கேள்" என்றேன். பிறகு அவன் வற்புறுத்தவே, நல்ல அழகு என்றும், நல்ல பண்பு என்றும் அவன் மகிழுமாறு சொன்னேன். அவனுடைய முகத்தில் மலர்ச்சி கண்டபோது, என் உள்ளம் நொந்தது; தாங்க முடியாத ஒரு வகை வேதனை, என் உள்ளத்தில் இருந்தது; அதனை வெளிக்காட்டாமல் நொந்து வாடினேன்.
காலைக் கடன்களை முடித்தேன். உணவுக் கூடத்துக்குப் போய்ச் சிற்றுண்டி உண்டு திரும்பிவந்து என் நாற்காலியில் உட்கார்ந்தபோது, என் மனப்புயல் இருந்த இடம் தெரியாமல் அமைதி நிலவக் கண்டேன். என் துடுப்புகள் உதவியாக இருந்தன; மரக்கலமும் பயன்பட்டது. கடமைகளில் மனம் சென்றது, துடுப்புகளை எறியாமல் உதறாமல் பொறுமையோடு இருந்தது