Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 20 - மு. வரதராசனார்
மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்.
தேர்வு முடிந்ததும் நேரே ஊர்க்குச் சென்றேன். அங்கே நான் கண்ட முதல் காட்சி, எங்கள் வீட்டுத் தோட்டம் ஒரு சிறு பள்ளிக்கூடமாய் மாறியிருந்ததுதான். தென்னை ஓலைகளால் ஒரு சிறு தாழ்வாரம் இறக்கியிருந்தது, தரை நன்றாக மெழகியிருந்தது. இருபது பனந்தடுக்குகள் பரப்பப்பட்டுச் சிறுவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே வெள்ளையாடை உடுத்து அன்புருவாகப் பாக்கியம் உட்கார்ந்து சில சிறுமியர்க்குக் கணக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
"எத்தனை நாளாக இப்படி ஆசிரியர் ஆக மாறிவிட்டீர்கள் அக்கா?" என்று வியப்போடு கேட்டேன்.
"போன ஆண்டு எல்லாம் பாத்திரம் தேய்த்து வேலை செய்து வயிறு வளர்த்தேன். முருக்கிலை ஆலிலை தைத்து வயிறு வளர்த்தேன். அவற்றால் ஒன்றும் குறைவு இல்லை. அப்போது ஓய்வு நேரங்களில் சிறுவர்க்குக் கதையும் கணக்கும் சொல்லிப் பார்த்தேன். அதில் தனி மகிழ்ச்சி இருந்தது. ஏன் அதையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணினேன். முதலில் இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். நம் வீட்டு நடையில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தேன். இப்போது இருப்பத்திரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அம்மாவை இடம் கேட்டேன். கையில் இருந்த பணத்தைப் போட்டுத் தென்னங்கீற்று வாங்கி இப்படிச் செய்தேன்" என்றார்.
"நல்லதுதான்" என்றேன்.
"என்ன செய்வது தம்பி! கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியும் வேண்டும் என்று தம்பி ஆசைப்பட்டான். அப்பா செய்து போட்டது. தனக்கு வேண்டும் என்று கேட்டான்.