ஒன்றுடன் ஒன்று மோத விட்டான். உதடுகளைக் கடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அங்குலம் அங்குலமாய்க் குனிந்து தலை எது, கால் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, குவியலாய்க் கீழே கிடந்தான். அதுவும் அந்தச் சாலையின் நடுப்பகுதியிலேயே. அப்படியாவது எந்த லாரியோ, அல்லது காரோ தன் மீது மோதி, தலையைச் சக்கரத்தோடு கொண்டு போகட்டும் என்பது மாதிரியான முடக்கம்.
தொலைதூரத்தில் ஒளி தோன்றியது. மிகச் சின்னதாய்த் தோன்றிய அந்த ஒளி, சிறிது நேரத்தில் மேலே நெற்றிக் கண்ணாகவும், கீழே சாதாரணக் கண்களாகவும் காட்டின. அவை நெருங்க நெருங்க, தாலாட்டு மாதிரியான ஒரு சத்தம். சிறிது நேரத்தில் அதற்கு மாறான சப்தமாகவும் ஒலித்தது. அந்த மூன்று ஒளிக் குவியல்களும் ஒரு பெரிய உருவத்தை இழுத்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது.
சுயம்பு அப்படியே உட்கார்ந்திருந்தான் - வருவது வரட்டும், தருவது தரட்டும் என்பது மாதிரி. ஆனாலும் அந்த மரண நெருக்கத்தில் அக்காவின் நினைவு, அண்ணன் பிள்ளைகளின் ஞாபகம், அம்மாவைப் பற்றிய தாகம், அண்ணனிடம் திட்டு வாங்க வேண்டுமென்ற ஆசை, அப்பாவிடம், சாட்டைக் கம்பால் அடிவாங்கி, தான் செய்த காரியத்திற்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மாறுவேடமோ அல்லது சுயவேடமோ போட்ட மன உளைச்சல்கள்...
குவியலாய்க் கிடந்த சுயம்பு, மீண்டும் மானுடமாய் மீண்டது போல், வளைந்து வளைந்து எழுந்தான். தொலைவில் வருவதை அடையாளம் கண்டுபிடித்து, கண்களை அகலமாக்கியபடியே சாலையின் ஓரத்திற்கு வந்தான். அவனை நெருங்கிவிட்ட அந்தப் பெரிய உருவம், அவனைப் பொருட்படுத்தாமல் ஓடியது... ஆனாலும் லேசாய் நிற்பதுபோல் ஒரு பாவலாக் காட்டியது. கீழே நிற்பவர்கள் தாவி, தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லாப் பேருந்துகளும் செய்வது போன்ற பாவலாதான். அவன், அதன் அருகே நெருங்கப் போன போது, அது பாவலாவை பாய்ச்சலாக்கியது. ஆனாலும், நடுச்சாலையில் எதையோ ஒன்றைக் கண்டு, அது நின்றது. மனிதர் என்றால் நின்றிருக்காது. ஆனால் அது ஒரு அழகான சூட்கேஸ். அதை 'லக்கேஜாக்காமல்' போவது அந்தப் பேருந்துக்குப் பிடிக்கவில்லை. இதற்குள், அவன் எக்கி எக்கி ஓடி அந்தப் பேருந்தின் முன்னால் போய் நின்றான். ஓட்டுநர், தன்னைப் பார்க்காமல் கீழே பார்ப்பதைப் பார்த்து அவனும் தனது பார்வையை அவர் பார்வையில் தொடர விட்டான். அது தன்னுடைய சூட்கேஸ்தான் என்று அரை நிமிடத்தில் அனுமானித்து, அதைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நிமிர்ந்த போது பேருந்து உருமியது. அவன் அந்தப்