பெட்டியை இரு கையாலும் தூக்கியபடியே சைகை செய்தான் - அதை ஓட்டுனருக்குக் கொடுக்கப் போவது போல். உடனே "ஏறுய்யா சீக்கிரம்" என்ற முகமறியாச் சத்தம். அவன் அந்தப் பெட்டியை மீண்டும் பின்புறமாய் வளைத்துப் பிடித்துக் கொண்டு பேருந்தின் பக்கத்து முன் வாசலில் நுழையாமல், பின்வாசலை நோக்கி நிதானமாக நடந்தான். இந்த மாதிரிச் சமயங்களில் எல்லாப் பேருந்துகளுக்கும் எப்படிப்பட்ட கோபம் வருமோ, அப்படிப்பட்ட கோபத்தில் அந்தப் பேருந்தும் உறுமியபடியே ஓடப்போனது. கொஞ்சம் ஓடியது. உடனே அவன் அதன் பின்னால் தலைதெறிக்க ஓடி, பின் வாசலைக் கடந்து, முன் வாசலில் முதல் படியை மிதித்த போது, "ஒப்பன் வீட்டு பஸ்ஸுன்னு ஒனக்கு நெனப்பா" என்று ஒரு குரல் சத்தம் போட்டபோது, அது தன்னைத்தானோ என்பதுபோல் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினான். மீண்டும் "ஏறய்யா" என்ற ஒரு உள்ளிருப்பு அதட்டல். அதன் ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்பட்டவன் போல், பெட்டியை ஒரு கைக்கு மாற்றிக் கொண்டு, அந்தப் பேருந்துக்கு தார்ச்சாலை போட்டது மாதிரியான கருப்புக் கைப்பிடியைக் கைப்பற்றியபடியே உள்ளே போனான்.
அந்தப் பேருந்துக்குள், பயணிகள் ஆண்வாரியாகவும், பெண்வாரியாகவும், அர்த்தநாரீசுவரவாரியாகவும் மண்டிக் கிடந்தார்கள். மூன்று ஆண்வரிசை இருக்கைகளில் ஆண் பெண் ஜோடிகள். ஒன்றில் இன்னொருவரும் உட்காரலாம் என்பது மாதிரியான 'நெருக்கம்'. இன்னொன்றில் ஆண் ஆசாமி கீழே விழப்போவது மாதிரியான இட நெருக்கடி. மற்ற இருக்கைகளில் பல்வேறு வகையான தொப்பிகள், குல்லாய்கள், வெறுந்தலைகள், மொட்டைத் தலைகள், முடி அழகுகள். மகளிர் பகுதிகளிலும், இதே விகிதாச்சாரம். ஒருத்தி குளிருக்காக உடம்பைத் தலையோடு சேர்த்து முக்காடு போட்டு முன்னிருக்கையின் பின்புறக் கம்பிக்கு அப்பாலும், பாதி உடம்பைப் போட்டிருந்த விதம், பதினாறு முழப் பட்டுப் புடவையை நீள வாக்கில் மடித்து அந்தக் கம்பியில் தொங்கப் போட்டதுபோல் இருந்தது. இன்னொருத்தியான, இளஞ்சிட்டு, ஜன்னலோர இருக்கையில் தனித்திருந்து தூங்காமல் தூங்கி சுகம் பெற்றுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவியம்மா, தனது இருக்கைக்கு முன் பக்கமுள்ள இருக்கையில் கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் சட்டையைப் பற்றுகோலாய் பற்றியபடியே தூக்கத்தில் தலையை மேலும் கீழும் போட்டாள். இதனால் அந்தச் சிறுமியின் தலை கீழும் மேலுமாய் ஆடியது. அதனாலும், இருவருக்கும், 'சடைத்தனமான' தூக்கம். ஒரு தாய்க்காரி அக்கம் பக்கம் பார்த்தபடி, மகளின் மாராப்பை அகலப்படுத்தி விட்டாள்.
மங்கலான விளக்கில், அந்தப் பேருந்துக்குள் இருந்த தூங்காத கண்கள் அத்தனையும் ஒரு