மனைவியைப் பார்த்து "அங்கே பாரு... சொல்லி வச்சு தனித்தனியா பஸ்ல ஏறி, இப்போ ஒண்ணா உட்கார்ந்து உரசிக்கிட்டு" என்று அவர்களைப் பார்த்தபடியே பேசினார். மனைவி அவரது கண்களைத் திருப்புவதற்காக, தலைமுடியைப் பிடித்திழுத்தாள். பிறகு "நீங்கள் செய்யாததா?" என்றாள். அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டே, "நாம் செய்யாததா" என்று தன் பேச்சு சாசனத்திற்குத் தானே ஒரு திருத்தம் கொண்டு வந்த போது...
ஜன்னல் கம்பிகளில் முகம் போட்டுக் கிடந்த அந்தப் பெண், ஏதோ ஒரு வாடை பட்டு அதை உணர்ந்தவள் போல் கண் விழித்தாள். பக்கத்தில் இருப்பவனை 'அண்ணனோ' என்பது மாதிரி கண்களைக் கசக்கிப் பார்த்தாள். பிறகு அவன் இல்லை என்று அறிந்ததும், சட்டென்று எழுந்தாள். அப்படியும் அசைவற்று இருக்கும் அவனைப் பார்த்துவிட்டு, 'இந்த அநியாயத்தைப் பார்க்க யாரும் இல்லையா?' என்பது போல், சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு பின்பக்கமாய்த் திரும்பி, "எண்ணா... எண்ணா" என்று கத்தினாள். அந்தப் பேருந்தின் 'கடைமடை' இருக்கையில் துள்ளித் துள்ளி விழுந்தும், தூக்கம் கலையாமல் கிடந்தவன், எத்தனையோ சத்தங்களுக்கு ஈடு கொடுத்தவன், இப்போது அலறியடித்து எழுந்தான். இதற்குள் அவளும் அந்த இடத்தை விட்டு, அவசர அவசரமாக வெளியே வரப் போனாள். ஆனால், அவனோ, இரண்டு கால்களையும் முன்னிருக்கையின் முதுகில் குவித்து வைத்துக் கொண்டு, அவளுக்கு வழியடைத்தான்.
அவள் குரலால், அத்தனை தூங்கிய கண்களும் இப்போது தத்தம் தலைகளில் தொங்குவது போல் எழுந்து நின்று குனிந்து பார்த்தன. கடைமடைப் பகுதியிலிருந்தவன் ஓடுகிற பேருந்துக்குள்ளேயே ஓடி, அதனால் சிறிது இடறி, அவள் பக்கம் போனான். அவள் உட்கார்ந்திருப்பவனை உஷ்ணமாகப் பார்த்தபோது-
ஓடி வந்தவன், உட்கார்ந்திருப்பவனை அவன் முடியைப் பிடித்தே தூக்கி நிறுத்தினான். அப்படி நிறுத்தப்பட்டவனுக்குக் கால் விநாடி கூட கருணை காட்டாமல் அவன் தலையை முன்னிருக்கைக் கம்பியில் போட்டுப் போட்டு மோதவிட்டான். அவனும் ரத்தச் சொட்டோடு அடித்தவன் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டபோது, இவன் அவன் தலைமுடியைப் பிடித்து பின்புறமாக வளைத்து, தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு, அவன் மூக்கையும் வாயையும் சேர்த்துக் குத்தினான். காலை மடக்கி வைத்து, வயிற்றில் உதைத்தான். ஆனால், அடிபட்டவனோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை - 'இன்னும் அடி' என்பது போல்.
எல்லோரும் 'அச்சோ' போட்டார்களே தவிர, அசையவில்லை. ஓட்டுநர், வண்டியைச் சீராக