"அவள் யாருன்னு எனக்குத் தெரியாது... நானாத் தான் உட்கார்ந்தேன்."
அடித்தவன், மீண்டும் அவனை அடிக்கப் போன போது, அந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தலையைப் பிடித்துத் தனது கக்கத்திற்குள் வைத்துக் கொண்டார். அப்படியும் அவன் “நாலு பேரு தப்பாய் நினைப்பாங்கன்னு நானே என் ஸிஸ்டர் பக்கத்தில உட்காரலே... இந்தப் பயல் என்னடான்னா... அநியாயம் செய்தவனை விட்டுவிட்டு... என்னை மடக்குறது என்ன நியாயம்?" என்று இயலாமையில் கத்தினான். அந்த அம்மா வேறு, புருஷன் பக்கத்தில் கோபத்தோடு வந்து, சட்டைக் காலரைப் பிடித்தாள். இதற்குள் அந்த நடுத்தரம், அடித்தவன் மீது போட்டிருந்த பிடியை விட்டு விட்டு, அவன் முதுகை பொறு பொறு என்பதுபோல் தட்டிவிட்டு, அடிபட்டவனை கூர்மையாகப் பார்த்தார். மனைவியின் கையை மடக்கி, ஒரு கையில் வைத்துக் கொண்டே அவனை சட்டைக்காலரைப் பிடித்து கழுத்தோடு சேர்த்து இழுத்தார். உடனே ஒரு பயணி இப்போது தான் வீரம் பிடர் பிடித்து உந்த “இவன விடப்படாது" என்று இருந்த இடத்தில் இருந்தபடியே கத்தினார். அது காதில் விழாதது போல், கத்தியவரைப் பொருட்படுத்தாமல், தன்னை மொய்த்த மனைவியை மீண்டும் தள்ளிவிட்டபடியே, கைக்குள் அடக்கமாய் பிடிபட்டவனை மேலும் கீழுமாய் உலுக்கிவிட்டு புலன் விசாரணை செய்தார்.
"நீ யாருடா... ஏய் சொல்றியா இல்ல..."
அவன், அவர் மார்பில் விழப்போனான். அவர் சிறிது விலகிக் கொண்டே அதட்டினார்.
"நீ யாருடா?"
"தெரியலே... எனக்கே தெரியலே..."
"இந்தக் கதையே வேண்டாம்... அப்பாவிப் பொண்ணுங்க மத்தியில சும்மா உட்காருவது மாதிரி உட்காருறது. அப்புறம் சுயரூபத்தைக் காட்டுறது... மாட்டிக்கிட்டா பைத்தியம் மாதிரி நடிக்கறது... மரியாதையாச் சொல்லு... ஒன் பேரு என்ன?"
"சுயம்பு."