"இந்தப் பேருக்குரிய அர்த்தம் உனக்குத் தெரியுமாடா அயோக்கியப் பயலே?... எந்த ஊரு? என்ன செய்யுறே?"
"நல்லாம்பட்டி..."
"சீ... எப்படிப்பட்ட பேர்ல இப்படிப்பட்ட பய... எங்கிருந்து வாறடா?"
"எஞ்சினீயரிங் காலேஜ்ல படிக்கேன்... ஊருக்குப் போறேன்..."
"எதுக்காகப் போறே?"
"பிடிக்கலே... பிடிக்கலே..."
"வயசுப் பொண்ணு பக்கத்துல உட்கார மட்டும் பிடிக்குதா?... சொல்லுடா? நீ முழு ஆம்புளைப் பயல். எப்படிடா உட்காரலாம்? சொல்றியா, இல்ல முதுகுத் தோலை உரிக்கணுமா?"
அவர், சுயம்புவை உலுக்கிக் குலுக்கினார். அவனோ, இரு கரத்தாலும் கண்களை மூடிக் கொண்டான். தலையை பம்பரம் போல் சுழல விட்டான். அந்த மனிதரின் மார்பிலேயே முகம் போட்டு, அவர் கழுத்தைப் பற்றிக் கொண்டு அழுதான். பிறகு, மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவன் போல் திடுக்கிட்டு, அவரிடமிருந்து விடுபட்டான். “வேணுமுன்னா என்னை போலீஸ்ல ஒப்படையுங்க... அவங்கதான் எல்லாரையும் அங்கேயே அடித்துக் கொள்வாங்களாமே... என்னையும் கொல்லட்டும்" என்று அப்பாவித்தனமாகச் சொல்வது போல் சொன்னான். மீண்டும் அழுதான். அந்த மனிதர், பிடி தளர, அவனைப் பார்த்தார். அவன் பார்த்த பார்வையில், அடித்தவனைத் தவிர, அத்தனைப் பயணிகளுக்கும் ஒரு அனுதாபம் ஏற்பட்டது. அந்தப் பெண் கூடத் தனது அழுகையை அடக்கிக் கொண்டு, அவனை அனுதாபமாகப் பார்த்தாள். சிலர் சத்தம் போட்டே பேசினார்கள். அவனைப் பார்த்தால் குற்றவாளியாக இருக்க முடியாது என்று ஒரு கட்சி. ஏதோ ‘ஒரு மாதிரி’ என்று ஒரு கட்சி. எல்லோருமே பேருந்து சீக்கிரம் போக வேண்டுமே என்ற ஒரே கட்சி. ஆகையால், அவனை ஒரு பிரச்னையாகப் பார்த்தார்கள். அந்த நடுத்தர மனிதர் அவன் மேல் போட்ட பிடியை எடுத்து விட்டு, அவனைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்தார்.