“நான் போகமாட்டேன். காலேஜுக்குப் போக மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு... பயத்தைத் தாங்க முடியலை...”
“என்னடா பயம், பொல்லாத பயம்? நம்மள மீறி எப்படிடா பயம் வரும்? எங்கே... அக்கா முகத்தைப் பார்த்துச் சொல்லு... எப்படி பயம் வரும்...?”
சுயம்பு, அக்கா மூலம் அனைவருக்கும் எதையோ ஒன்றைச் சொல்லப் போனான். அதற்குள் அவன் தந்தை பிள்ளையார், திண்ணையிலிருந்து துள்ளி எழுந்து சுவரில் சாத்தப்பட்ட சாட்டைக் கம்பை எடுத்தார். உடனே வெள்ளையம்மா, “இதுக்கு மட்டும் குறைச்சலில்லே. அவன் சுயமாவா பேசறான்? எல்லாம் அந்தப் பாழாப் போற பய பொண்டாட்டி சீதாலட்சுமி படுத்துற வேலை” என்றாள். உடனே அவர் மகன் மேல் குறி வைத்த சாட்டைக் கம்பை, மனைவிக்குக் குறியாக்கியபடியே கத்தினார்.
“எல்லாம் இந்தப் பொம்பளைங்க கொடுக்கிற இடம் தான்... செருக்கி மவன நல்ல வார்த்தையா சொல்லி துரத்துரத விட்டுட்டு தாலாட்டுப் போடுறாளுவ, தாலாட்டு... எப்படி உருப்படுவான்? இப்ப சொல்றதுதான் சொல்லு... அவனுக்குப் படிக்க முடியாட்டால் எந்தக் ‘காட்டுக்காவது’ ஓடிப் போகட்டும். இங்க வரப்படாது... நல்லாப் படிச்சு ஒவ்வொரு பரீட்சை லீவுலயும் ராசா மாதிரி வரட்டும்... நான் வேண்டாங்கலை. அப்படி இல்லாம, இப்படி வந்தால், ஒண்ணு இந்த வீட்ல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும்... சீதாலட்சுமி... படுத்துறாளாம்... ‘கரிவலிச்சு’... வந்திருக்கான்...”
இந்தச் சமயத்தில் கோமளம் குறுக்கிட்டாள். முப்பது வயதுக்காரி. பெங்களூர் கத்திரிக்காய் மாதிரி சிறிது கரடு முரடான முகம். ஆனாலும், தென்னை இளமட்டை போன்ற அந்த நிறமும், அந்த லாவகமும், அவளுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்தன. இப்போது வருங்காலத் தங்கையின் கணவன் என்ற உரிமையோடு, அவள் சுயம்புவை அதட்டினாள்:
“இவ்வளவு பணம் போட்டு உன்னை எதுக்காக படிக்க வைக்கோம்! இந்த மூணு மாதத்துல, ஹாஸ்டலுக்கே மாதா மாதம் எழுநூறு ரூபா ஆகியிருக்கு... புத்தகம், பீஸுன்னு தனியா மூவாயிரம்... ஒங்கப்பா, வீட்ல இருக்க வேண்டிய இந்த வயசுல, காட்ல கிடக்கார்... ஒங்க