இந்தக் கலியாணத்தை நடத்த விடமாட்டேங்கா’ என்று தம்பி மீண்டும் சொல்லிவிட்டுப் போனதை எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் அவள், சத்தம் போட்டுத் தொலைவில் போன தம்பியைத் திரும்ப வைத்துப் பேசினாள்.
“அதுக்காக சீக்கிரமா ஊருக்கு வந்திடாதே... வேணுமுன்னா லெட்டர் போடு.”
சுயம்பு, அக்காவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே, தன் பாட்டுக்கு நடந்தான். அந்தப் பொது வழியில் நடந்தாலும், தான் மட்டுமே தனியாய் நடப்பது போல் நடந்தான். உடம்பைச் சுருட்டிச் சுருட்டி, சுருண்டு சுருண்டு நடந்தான். குழாயடிப் பக்கம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கிசு கிசு பேசினார்கள். “என்ன வந்திட்டு இவனுக்கு? நம்மையே பார்த்துட்டு நிக்கான் பாரு? புட்டத்தை ஏன் இப்படி அசைச்சு அசைச்சு நடக்கான்? கையக் கால ஏன் டான்ஸ் ஆடுற மாதிரி கொண்டு போறான்? இதோ பாருடி, இந்த மலர்க்கொடிய காணல. அநேகமா இப்போ தோட்டத்துப் பக்கத்துல நிப்பாள்...”
அந்தக் குழாயடிப் பெண்களை ஒன்றிப் போய்ப் பார்த்த சுயம்பு, மீண்டும் தன்னைத் தானே தூக்கிக் கொண்டு போவது போல் நடந்தான். அக்கம் பக்கத்துத் தேனீர்க் கடைக்காரர்களையோ, அவர்கள் குசலம் விசாரிப்பதையோ காதில் வாங்காமல், பலியாடு போல, தன்னை யாரோ இழுத்துக் கொண்டு போவது போல் கழுத்தை நீட்டி நீட்டிப் போனான்.
சுயம்பு, அந்தக் கருவேலமரக் காட்டுப் பக்கம் நெருங்கி விட்டான். முள்ளம் பன்றிகள் சிலிர்ப்பது போல், பச்சைப் பசேல் என்று இருந்த அந்தக் காடு, வெள்ளை வெள்ளையாய் சில பகுதிகளில் குற்றுயிரும் குலையுயிருமாய், பாதி வெட்டப்பட்ட மரப் பிணங்களாய்க் கிடப்பது மட்டுமே அவன் கண்ணுக்குத் தோன்றியது. பழையபடியும் வீட்டுக்குப் போகலாமா என்று நினைப்பு. அப்போது அந்தக் காட்டின் பிதாமகன் - ‘வாட்ச்மேன்’ வீரபாண்டி வந்தான். வரும்போதே, ஒப்பாரி போடாத குறையாகப் பேசிக் கொண்டே வந்தான்.
“படிச்சவன்னா ஊருக்குப் பிரயோசனப்படணும்... எல்லாப் படிச்ச பசங்க மாதிரி நீயும் பிரயோசனப் படலை. இந்த சமூகக் காடு செடியாய் இருக்கும் போதே உரமும் தண்ணியும் ஊத்துனவன் நான். அப்போ ஒரு துளி தண்ணியோ, ஒரு பிடி உரமோ ஊத்தாத பயலுவ எல்லாம், பட்டப்பகலுலேயே நான் வளர்த்த மரங்களை வெட்டுறாங்கன்னு போலீசுக்குப் போனால், அங்கே இருக்கிற இன்ஸ்பெக்டரு, ‘என்னை மாதிரி நீ எப்படிடா காக்கிச் சட்டை