நின்று கொண்டான்.
மலர்க்கொடி, தலை தாழ்த்தியபடியே அவனை மேல் நோக்காய்ப் பார்த்தாள். அவனை விட, மூன்று வகுப்புக்கள் தள்ளிப் படித்தவள். ஐந்தாவது படிக்கும் போது, எட்டாவது படித்த இவன், தனது தங்கை மோகனாவுக்கும், அவளுக்கும் கணக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தலையில் குட்டியிருக்கிறான். தோளைக் கிள்ளியிருக்கிறான். அப்புறம் இருவரும், ஆண் பெண் பள்ளிகளுக்குத் தனித் தனியாகப் போய்விட்டார்கள். பத்தாவது படிக்கும் போது, இவள் பெரியவளானாள். அது முடிந்து தெருவுக்கு வந்த போது, இவனே சகஜமாகப் பேச்சுக் கொடுத்தான். அதையே சரசமாக எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்குள் ஒளிந்து ஜன்னல் வழியாக இவனைப் பார்ப்பாள். இப்போது கூட, புதுமையான பருவ உனர்வுகளை, அவனோடுதான் மானசீகமாக பகிர்ந்து கொள்ளுகிறாள். அவன் சின்ன வயதிலேயே தன்னைக் கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்தது, இப்போதும் அவள் மனத்தைக் கிறக்கிக் கொண்டே இருக்கிறது.
மலர்க்கொடி, தலைநிமிர்ந்து அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். பூத்துக் குலுங்கும் குண்டுமல்லி போன்ற முகம். செம்பருத்தி மொட்டு பிரிவது போன்ற உதடுகள். மருதாணி தடவிய கைகள். முன்பக்கம் இருபுறமும் தொங்கிய மாலையைச் சமப்படுத்தியபடியே, அவனைச் சாய்த்துப் பார்த்தாள். அவனும் அவளது மஞ்சள் புடைவையையும் அதே நிற ஜாக்கெட்டையும் உற்றுப் பார்த்தான். பிறகு அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து, “இந்தப் புடைவை நல்லா இருக்கே” என்று கேட்டுவிட்டு அதே முந்தானையால் அவளை மூடி விட்டான். அவளுக்குக் கோபம் கால்வாசியும், தாபம் முக்கால்வாசியுமாய் கோபதாபம் ஏற்பட்டது. கோபத்தின் மீதே கோபப்பட்டு, “என்னை மறக்கமாட்டீர்களே” என்று சொல்லிவிட்டு அவன் பதிலையே ஆவலோடு எதிர்பார்த்தாள். அவனும் பேசினான்.
“மலர்... மலர்...”
“இதுக்குமேல பேச வராதா?”
“ஏன் வராது... உன் கழுத்துல தொங்குற பூவில பாதியாவது கொடேன்...”
“இந்தாங்க... முழுசாவே எடுத்துக்குங்க... அப்பாடா... நான் வாழ்வதற்கு இன்னிக்குத்தான் அர்த்தம் புரியுது...”