Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 05 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 5
பகலும், இரவும், ஒன்றுடன் ஒன்று போர் தொடுத்த வேளை.
கண்ணுக்குத் தெரிந்த பகலை, கண்ணுக்குத் தெரியாத இரவு கொரில்லா முறையில், தாக்கிச் சிறுகச் சிறுகத் தலையாட்டிக் கொண்டிருந்த நேரம்.
சுயம்பு, அந்தப் பல்கலைக் கழக வாசலுக்குள் கண்ணீரும் கம்பலையுமாக நுழைந்தான். அந்த வாசலைப் பார்த்த உடனேயே, உடம்பு முழுவதையும் ஏதோ ஒன்று தாக்குவது போல ஒரு வலி. அந்த வளாகத்திற்குள் வியாபித்த பொறியியல் கட்டிடத் தொகுப்புக்களையும், பட்ட மேற்படிப்பு அடுக்கு மாடிகளையும், கண்கொண்டு பார்க்காமல், கால் பார்த்து நடந்தான். ஆங்காங்கே மங்கிய பகலொளியில், மாணவ மாணவியர் தனித்தனியாகவும், குழுக் குழுவாகவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில மறைவான இடங்களில் “இரட்டை விளையாட்டு”, என்றாலும் கண்ணுக்குப் படும்படியான மைதானத்தில் ஒரு பக்கம் மாணவர்களின் வாலிபால் விளையாட்டு, மறுபக்கம் மாணவியரின் கூடைப்பந்து விளையாட்டு. கூடைப்பந்து வேண்டுமென்றே, வாலிபால் கிரவுண்டுக்குள்ளும், வாலிபால் பந்து, கூடைப்பந்து கிரவுண்டுக்குள்ளும் விழுந்து விழுந்து எம்பின. உடனே ஆண் சிரிப்பு - பெண் சிரிப்பு - அப்புறம் கலவைச் சிரிப்பு.
சுயம்பு, கூடைப்பந்துக்காரிகளைப் பார்க்காமல், ‘வாலிபால்’காரன்களைப் பார்த்தான். குறிப்பாக, ‘கட் அடிக்கும்’ ஒரு மாணவனைக் கண்கொட்டாமல் பார்த்தான். அப்படிப் பார்க்கப் பார்க்கத் தானே ஒரு பந்தாகி அலைக்கழிவது போல், அந்த இடத்தை விட்டு அங்குமிங்குமாய்ச் சுற்றினான். தனக்குத்தானே முனங்கிக் கொண்டான் ‘எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு உண்டு. ஆனால் என் பிரச்னைக்கு என்ன உண்டு... நானே முடிவாகணும்... எம்மா... என்னை எதுக்கும்மா பெத்தே?...
விழி இழந்தவர்கள், தாங்கள் நடமாடிய இடங்களின் சுவடுகளை வைத்து நடப்பது போல் நடந்து, மாணவர் விடுதிக்கு வந்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், போன்ற பல்வேறு வளைவு போர்டுகள் கொண்ட கட்டிடக் குவியல் வழியாய், பாலைப் போல் தோன்றும் ஒரு கட்டிடத்தை நோக்கி நடந்தான். முதலாவது ஆண்டு மாணவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு