Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 07 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 7
அந்த ஆட்டோ பறந்தது. இருவருக்கும் இடையே சிக்கிய சுயம்பு, டிரைவரே திரும்பிப் பார்க்கும் விதத்தில் கத்தினான்.
“ஏண்டா என்னை இப்படி இடிச்சிட்டு உட்காருறீங்க... டேய் மூர்த்தி, கைய எடுடா... டேவிட்டையும் கூட்டி வந்தால் என்னடா...”
அந்த ஆட்டோ, டாக்டர் பரமசிவம் ‘கிளினிக்’ முன்னால் வந்து நின்றது. ஆனால், அதன் வாசல், இடையிடையே சிலிர்த்த இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. பக்கத்து ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடையில் விசாரித்தபோது, அந்த டாக்டர் ஏதோ ஒரு செமினாருக்காக பம்பாய் போயிருப்பதாகவும், நேற்றே போய் விடடார் என்றும் செய்தி கிடைத்தது. முத்து, கோபம் கோபமாகக் கத்தினான்.
“அந்த டேவிட் பயல் வேணுமுன்னே நம்மளை அலைய வச்சுட்டான் பாருடா... நம்மை மெண்டலா ஆக்கிட்டான்...”
சுயம்பு முத்துவை முறைத்தபடியே பேசினான்.
“அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவரப் பார்த்தா, நல்லவராத் தோணுது... ஒங்கள மாதிரி தெரியலே...”
“எப்படிடா!... இப்படிப்பட்ட ஒரிஜனல் ஜோக்கைக் கேட்டு ரொம்ப நாளாகுது. மூர்த்தி இப்ப என்னடா செய்யலாம்...”
“சைக்யாட்ரிஸ்ட் இல்லாமப் போனதும், ஒரு வகையில் நல்லதுக்குத்தான். இல்லாட்டால், இவன மட்டுமல்ல, இவன் அப்பா, அம்மா, இவனோட ஒழவு மாடு எல்லோரையும், எல்லாத்தையும் பார்க்கணுமுன்னு சைக்யாட்ரிஸ்ட் அடம் பிடிப்பார். ‘பேக்கிரவுண்டு' என்ற பெயரிலே, நோயாளிகளை ‘அண்டர்கிரவுண்டு’க்குள்ள அனுப்புறவங்களுக்குப் பேர்தான் ‘சைக்யாட்ரிஸ்ட்’. அடுத்த தெருவுக்குப் போகலாம். எனக்குத் தெரிந்த டாக்டர், தூரத்து உறவு...