Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 08 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 8
சகாக்களோடு அறைக்குள் வந்த சுயம்பு, கட்டிலில் ‘ஜம்ப்’ செய்து ஜன்னலில் முதுகைப் போட்டான். அவர்களைப் போலவே அவனுக்கும் ஆச்சரியம். நாமா இப்படிக் கத்தினோம். ஒரு மாத்திரையிலேயே சரியாயிட்டே. ஆனாலும் அவ்வப்போது முகம் சுளித்தான். அவர்கள் அவன் கையைப் பிடித்துக் குலுக்கும்போது ஒரு ஷாக். கத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் கத்தக் கூடாது என்று உள்ளுக்குள்ளேயே ஒரு கட்டளை. எல்லாவற்றையும் லேசாய் எடுக்கும் நிதானம். அந்த மாத்திரை அவன் மனத்தைக் கட்டிப் போட்டுவிட்டது.
சிறிது நேரத்தில், அந்த அறைக்குள் ஏழெட்டுப் பேர் திமுதிமுவென உள்ளே வந்தார்கள். நாலு லுங்கிக்காரன்கள். இரண்டு பாண்ட்கள். ஒரு வேட்டிக்காரன். அவர்களே உசத்தியாகப் பார்க்கும் ஒரு சபாரிக்காரன். கலர்ப்பனியன்காரர்களோடு உள்ளே வந்த சபாரி, உயரத்திலும் அகலத்திலும் சராசரிக்கு மேலே. எடுத்த எடுப்பிலேயே கேட்டான்.
“தம்பி மூர்த்திக்கண்ணு, என் பேரு பொன்முகன். நீ நம்ம காலேஜ் யூனியன் தேர்தல்ல செகரட்டரி போஸ்ட்டுக்கு நாமினேஷன் போட்டிருக்கியாமே.”
“ஆமாம். உட்காருங்க அண்ணே.”
“நான் தலைவருக்கு போட்டி போடறது உனக்குத் தெரியுமில்லே...”
“ஆமாண்ணே. ஒங்களுக்கு ஒத்தாசையா...”
“அதுக்கு ஒரு சீனியர் இருக்கான். நீ உள்ளே வந்து மூணே மூணு மாசம்தான் ஆகுதுப்பா...”
“இருக்கட்டுமேண்ணே. பஸ்ட் இயர் பசங்களுக்கு கட்டில் கிடையாது. ஃபேன் கிடையாது. மூட்டைப் பூச்சிகளோட சகவாசம். இந்தக் கட்டிடத்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு பூகம்பம் வரப்போகுது. அதுக்கு முன்னால, அதைத் தடுக்கணும். இதுக்குத்தாண்ணே போட்டி போடுறோம்.”