Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 10 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 10
சுயம்பு பல்கலைக்கழக விடுதிக்கு வந்தபோது இரவாகிவிட்டது. மூர்த்தியும் முத்துவும் அவனைப் பழையபடியும் கண்டுக்காமல் இருந்தார்கள். இவன்தான் விடவில்லை.
“என்னடா ஒருத்தி எங்கே போயிட்டு வருதுன்னு கேட்கிறீங்களாடா... நீங்க ஆம்புளைங்களாடா...”
“என்னடா உளறுறே.”
“எங்க அக்காவுக்கு நிச்சயிச்ச மாப்பிள்ளயப் பார்த்து விட்டு வரேன். எனக்கே அவரு மேல ஒரு ஆசை. அது காதலா மாறாமல் இருக்க ரெண்டு காரணம் இருக்கு.”
“மாத்திரை வேகம் முடிஞ்சுட்டுன்னு நினைக்கேன். இன்னிக்கு இவனுக்கு ரெண்டு மாத்திரையா போடணும்.”
முத்து மாத்திரைகளை எடுக்கப் போனபோது, மூர்த்தி கத்தினான்.
“பாவிப் பயலே. போனதே போனே. சொல்லிட்டுப் போகலாம் இல்ல. உன்னால இன்னிக்குப் பெரிய ரகளை. சீனியர்கள்தான் உன்னைக் கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு நாங்க உருட்டுக் கட்டையோட போக, அவங்க சைக்கிள் செயினோட எதிர்க்க, கடைசியில் விவகாரம் ‘ரிஜிஸ்ட்ரார்’ வரைக்கும் போயிட்டுது. போலீஸ்ல வேற கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு. இப்போ உன் பேரு துணை வேந்தர் பேர விட அதிகமா அடிபடுது... என்னடா நினைச்சுக்கிட்டே...”
“போடா கீடான்னு டா போட்டுப் பேசினே, பல்ல உடைப்பேன்டா...”
“நீ மட்டும் பேசலாமாடா...”
“நீ ஆம்புள... டாதான் போடணும்.”