“ஓங்க பேருதானே சுயம்பு. ரிஜிஸ்திரார் கையோடு கூட்டிட்டு வரச் சொன்னார். எழுந்திருங்க...” சுயம்பு, அப்படியே எழுந்து அவருடன் அப்படியே புறப்பட்டான். அவர் பரபரப்புக் குரலில் கேட்டார்.
“லுங்கியோட வாறீங்க...”
“ஆமா.... சேலை இல்ல...”
சுயம்பு, சிறிது தூரம் நடந்து இடையில் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தான். துணைவேந்தருக்கு அடுத்த படியாக உள்ள ஆனானப்பட்ட ரிஜிஸ்ட்ரார் கிட்டவே இப்படி வருகிற இந்த ரவுடி அந்தப் பெண்ணிடம் ‘அப்படித்தான்’ நடந்திருப்பான் என்றும், அவள் தான் கற்பழிப்பை வெளியே சொல்லி அவமானப்பட விரும்பவில்லை என்றும் நினைத்துக்கொண்டார். ஆகையால் அவனுக்குப் பின்னால் இடைவெளி கொடுத்தே எச்சரிக்கையாய் நடந்தார். ‘இந்த மாதிரி பசங்க இடுப்புல பிச்சுவா இருந்தாலும் இருக்கும்.’
சுயம்பு, விடுதிக் கட்டிடத்திலிருந்து விடுபட்டு மாணவர் பூங்கா வழியாய் நடந்தும் கடந்தும் விருந்தினர் இல்லம் முன்னால் நின்று ‘எங்கே போக வேண்டும்’ என்பது போல் தொலைவில் வந்தவரைப் பார்த்தான். அவர், பதிவாளருக்குக்கூடக் கொடுக்காத அத்தனை பய பக்தியையும் அவனிடம் காட்டி, அந்த இடத்தையும் காட்டி, பிறகு வேக வேகமாய் ஓடிவந்து அவனுக்கு முன்னால் போனார். இரும்பைவிட வலுவானதுபோல் தோன்றிய தேக்குமர மாடிப்படி வழியாய் நடப்பது தெரியாமல் நடந்து, சுயம்பு பதிவாளர் அறைக்குள் நுழைந்த போது அந்தப் பதிவாளர், அவன் லுங்கியைப் பார்த்து லேசாய் திடுக்கிட்டதுபோல், பேப்பர் வெயிட்டை எடுத்தார். பிறகு முன்னால் இருந்த இருவரிடம் ஏதோ சொல்ல, ஆறுமுகப்பாண்டி திரும்பினான். பிள்ளையார் அசையாது இருந்தார். அவர்களைப் பார்த்துவிட்ட சுயம்புவும், அண்ணன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்கலங்க சுயம்புவின் கைகளைப் பிடித்தான். பிள்ளையாரோ, அவன் அங்கே இல்லாதது போல் மேலே ஓடும் மின் விசிறியை வெறித்துப் பார்த்தார். அப்போது பதிவாளர் குழைந்தார்.
“உட்காருப்பா... சும்மா உட்கார்... நீ உட்காரலாம். யூ ஆர் நோ லாங்கர் மை ஸ்டூடண்ட்.”