காட்டச் சொல்லுறேன். பிச்சை... கேட்கேன்...”
“அழாதீங்க மிஸ்டர் ஆறுமுகப்பாண்டி... நாங்க கருணை காட்டியிருக்கத்தான் செய்யுறோம். இவன் வேண்டுமென்றே செய்திருந்தால், காலேஜ விட்டு எக்ஸ்பெல் செய்திருப்போம். அப்படிச் செய்திருந்தால் ஒங்க தம்பிய வேற எந்தக் காலேஜுலயும் சேர்க்க முடியாது. கவர்மெண்ட் வேலைக்கும் போக முடியாது. ஆனால் நாங்க அப்படிச் செய்யல. நீங்களே மனுப்போட்டு ஒங்க பையனோட டி.சி.யை கேட்கிறது மாதிரிதான் அந்தக் காகிதத்திலே எழுதியிருக்கோம். ஒங்களுக்கு இஷ்டமுன்னா கையெழுத்துப் போடுங்க... இல்லாட்டால்...”
பதிவாளர், இழுத்தபோது, பிள்ளையார் எழுந்தார். பெஞ்சுமேல் ஏற்றப்பட்ட அந்தக் காலத்து மாணவன் போல் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு செய்யுளை ஒப்பிப்பதுபோல் ஒப்பித்தார். துக்கமும், துயரமும், எதுகை மோனையாக உடைந்த குரலோடு ஒப்பித்தார்.
“இவன் தானாய் முளைச்ச காட்டுச்செடி அய்யா. எங்க ஊரு மோசமுன்னா, அதுலயே எங்க வம்சம் படுமோசம் அய்யா. எங்க வகையறாவுல எவனுக்கும் பெருவிரலக்கூட பெறட்டத் தெரியாது அய்யா... இதனாலயே எங்க வகையறாவுக்கு தற்குறிக் குடும்பம்னு பேரு அய்யா. அதனாலதான், இவன் எட்டாவது படிக்கும் போது ‘வயலவிட உனக்கு பள்ளிக்கூடம் பெரிசாயிட்டோன்’னு அடிக்கக்கூடப் போனேன். இவன்தான் என்னைச் சத்தம் போட்டு, தம்பிக்குப் பதிலாக நான் ரெண்டு மடங்கு வேலை பாக்கேன்னு இவன மேல மேல கொண்டு படிக்கவிட்டான். கடைசி சர்க்கார் பரீட்சை எழுதி, இவன் நல்ல மார்க் வாங்குனதாய், பெரிய மவன் சொன்னபோது, ‘ஒன் தம்பிய வயல் வேலையப் பார்த்துக்கிட்டே சர்க்கார் வேலைக்கு எழுதிப்போடச் சொல்லுன்னு சொன்னவன்யா நான். இந்த ரெண்டு பயல்களும் சேர்ந்து இங்க எழுதிப்போட்டது எனக்குத் தெரியாது அய்யா... இடம் கிடைச்சதும் பணமுன்னு வந்தது. பெரியவன் தலையைச் சொரிந்தான்யா... இந்தப் படிப்பு படிச்சா என்ன வேலை கிடைக்குமுன்னு கேட்டேன்யா. நான் கனிஞ்சத பார்த்துட்டு ஒங்க முன்னால நிக்கானே, இவனே ‘கடைசிப் பரீட்சை முடியும்போதே வெளி தேசத்துக்கு போற வேலை கிடைக்கும். ஆயிரக்கணக்குல ரூபா கிடைக்குமுன்’னு சொன்னான். உடனே நான் இவன பிடறியில ஒரு போடு போட்டேன்யா. ‘செருக்கி மவனே, பாசை தெரியாத ஊருக்குப் போய் வேஷத்தை மாத்தி நீ எங்களை மறக்கதுக்கு ஒன்ன நான் படிக்க வைக்கணுமா... இந்த ஒண்ணுக்காகவே உன்னைப் படிக்க வைக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன்யா. பெரியவன். அதான் இவன், எனக்குத் தெரியாமல் எங்க ஊர் காண்ட்ராக்டர் கிட்ட மூவாயிரம் ரூபாய் கைமாத்தா வாங்கி, இவனை