Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 13 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 13
பிள்ளையார், பிள்ளைகளோடு வெளியே வந்தார். அந்த அறையின் வாசலிலேயே அந்தப் பெண் கொடுத்த பழைய சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு “குப்பையில போடம்மா” என்றார். ஆறுமுகப்பாண்டிதான் அதை வாங்கிக்கொண்டு பித்துப் பிடித்துப்போய் நின்ற தம்பியையும் இழுத்துக்கொண்டு அப்பாவிற்குப் பின்னால் ஓடினான்.
அந்த மூவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்த அறைக்குள் நடந்தபோது மூர்த்தியும் முத்துவும் அவர்கள் வந்தது தெரிந்ததுபோல், கதவைத் திறந்தார்கள். பிள்ளையாரும் ஆறுமுகப் பாண்டியும் வழியில் பதிவாளரைப் பார்ப்பதற்கு முன்னால், அவர் விவரமாக எழுதியிருந்த கடிதத்தை முத்துவிடம் காட்டியிருந்தார்கள். பிள்ளையார் ஜன்னல் வழியே பார்த்தார். ஆறுமுகப்பாண்டி தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான்.
சுயம்பு சுயமாக நிற்காததுபோல் நின்றான். மூர்த்தி பட்டும் படாமலும் கேட்டான். பரீட்சையின் முடிவை எழுதும் போதே தெரிந்துகொண்ட மாணவனைப்போல்.
“நீங்க சொல்லியும் கேட்கலையா...?”
பிள்ளையார் வெடித்தார்.
“எப்படிப்பா கேட்பாங்க. இவன் செய்த காரியம் லேசுப்பட்டதா. இதோ பாரு இந்தச் செருக்கி மவன் இப்படி லுங்கியக் கட்டிக்கிட்டு வந்தாமுன்னா உபகாரம் செய்ய நினைக்கவங்களும், உபத்திரவம்தான் செய்வாங்க...”
“எப்படியும் அடுத்த வருஷத்துல பழையபடியும் சேர்த்துடலாம்.”
“பசில பாலுக்குத் துடிக்கிற குழந்தைக்கு சினை ஆட்டைக் காட்டுற கதை... நீ ஆறுதலுக்குத்தான் பேசறே! ஆனால், அது தேவைப்படாத அளவுக்கு மனசு மறத்துட்டு... ஏடா பெரியவன்... பெட்டி படுக்கைய எடுடா... ஒன் என்ஜினியர் தம்பியை சீக்கிரமா கூட்டிட்டு போனும் பாரு... பெரிய வேலை காத்திருக்குல்லா.”
பிள்ளையார், வெறுமையாகச் சிரித்தபோது, ஆறுமுகப் பாண்டி தம்பியின் மிலிட்டரி டிரங்க்