Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 14 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 14
ஒரு மாத காலம், அந்தக் குடும்பத்திற்கு இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல் ஓய்ந்தது - சுயம்புவைப் போல்.
அந்தக் குடும்பத்தில் மோகனா தவிர, அனைவரும் ஊரில் தேவைப்பட்ட அளவிற்கு மேல் தலைகாட்ட வில்லை. ஆறுமுகப்பாண்டியும் பிள்ளையாரும் அதிகாலையிலேயே வயலுக்குப் போய்விட்டு ஆள் அரவம் முடிந்த இரவிலேயே வீட்டுக்குத் திரும்புவார்கள். மரகதம், அவ்வப்போது அழும் தம்பியைச் சரிக்கட்டுவதிலேயே தன்னைக் கழித்தாள். எப்படியாவது, அடுத்த ஆண்டு அவனை அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதில் அவளுக்கு ஒரு குறிக்கோள். அண்ணிக்காரி, கோமளம் தங்கைக்கு ஏற்கனவே தாலி கட்டிவிட்டது போலவும், இப்போது தங்கை விதவையாக இருப்பது போலவும் ஒரு துக்கத்தோடு வீட்டு வேலைகளைக் கூடச் சரியாகச் செய்யவில்லை. அம்மாக்காரி வெள்ளையம்மா, கணவனோடு சாடைமாடையாகச் சண்டை போட்டுக் கிடைக்கும் இன்பத்தை இழந்தவளாய்ப் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். அண்ணன் மகன் அந்த வீட்டில் ‘கால்’ வைத்திருந்தால், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்பது அவளுடைய அனுமானம். இதனால் முன்பின் பார்த்தறியாத வெளியூர் மாப்பிள்ளையின் மொட்டைத் தலை அப்பன் கால் பட்டே இந்த நிலமை என்றால், அவன் மகன் காலடி வைத்ததும் என்னென்ன நடக்கப் போகுதோ என்று இப்போதே அவளுக்கு ஒரு பயம்.
சுயம்புவைப் பற்றி ஊரிலும், பல்வேறு விதமான வதந்திகள். மலர்க்கொடியைப் பார்ப்பதற்காகவே, அவன் கல்லூரியைப் பார்க்க விரும்பவில்லை என்று ஒரு கிசுகிசுப்பு. கல்லூரியில் இப்படிப்பட்ட ஒரு அப்பாவி, ஒரு பெண்ணை பலவந்தமாகக் கற்பழிக்க முடியுமா என்று ஒரு வாதம். இந்தக் காலத்தில் அப்பாவிகளைத்தான் நம்ப முடியாது என்று ஒரு எதிர்வாதம். கடந்த காலத்தில் இறந்த சீதாலட்சுமி, அன்னக்குஞ்சு, வடிவரசி, போன்றவர்கள் அவனை ஆட்டிப்படைப்பதாக ஒரு ஐதீகப் பேச்சு. அவன் எப்போதாவது ஊருக்குள் போனால், பெண்கள் பக்கமே நிற்பதை நினைத்து, ஊராருக்கு அவன் மீதிருந்த சந்தேகம் ஓரளவுக்கு உறுதிப்பட்டது. பொம்பளக் கள்ளன். இந்தப் பின்னணியில், சுயம்பு வலது பக்க அறையில் கட்டில் காலில் சாய்ந்தபடி கிடந்தான். அந்த அறையில்தான் மரகதக்காவும், மோகனாவும் தங்குவது. இப்போது சுயம்புவும் அங்கே சேர்ந்து கொண்டான். மேலே குறுக்காகக் கட்டப்பட்ட