Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 17 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 17
அந்தக் கட்டிடம், மருத்துவமனையா, அல்லது லாட்ஜா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
வெளியே, வளைவு வளைவாயும் அழகழகாயும் தோன்றும் அந்த இரண்டு மாடிக் கட்டிடத்திற்குள், டாக்டர்களின் நடமாட்டத்தையே காணவில்லை. ஆங்காங்கே சில பையன்கள் டிபன் செட்டுகளைப் பொட்டலம் பொட்டலமாகவும் தட்டுத் தட்டாகவும் எடுத்துக் கொண்டு போனார்கள். இதை வைத்து அந்தக் கட்டிடத்தை லாட்ஜ் என்று சொன்னால் தப்பில்லை. அதே சமயம் வெளியே இன்னொரு பக்கத்தில் ஒரு மருந்துக் கடையும் உள்ளே ஒரு இடத்தில் தலையில் வெள்ளைக் கைக்குட்டைகளைக் கட்டிய பெண்களையும் பார்த்தால், அதை, மருத்துவமனை என்றும் முனங்கிக்கொண்டே சொல்லலாம்.
அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆறாவது எண் அறையில் சுயம்பு தன்னந்தனியாய்க் கிடந்தான். ஸ்பிரிங் கட்டில், அவன் சுகப்படாமல் போனதால் கிடைத்த சுகமான கட்டில். சின்னதே அழகு என்பது போல் சின்ன அறை. மொசைக் தரை. வால் பேப்பர் சுவர்கள். அவன் கட்டிலுக்குப் பின்னால், கிளிப் பிடித்த பேடில் ஏழெட்டுக் காகிதக் குவியல்கள். ஈஜிஸி கோடுகள். ரத்தச் சித்திரிப்புகளைக் காட்டும் ஒரு தாள். சிறுநீர் இயல்புகளைச் சொல்லும் ஒரு சதுரக் காகிதம். நுரையீரலைக் காட்டும் எக்ஸ்ரே படம். தலையைப் படம் பிடித்த இன்னொரு படம். ரத்த அழுத்தம், எல்லாமே நெகடிவ். அதாவது அவன் உடல்நிலையைக் காட்டும் சுபசகுன அறிகுறிகள். கிட்னியும் சரி என்றால், அவன் வீட்டுக்குப் போகலாம். எந்த நோயும் கிடையாதாம். வாடகை மட்டும் நாளுக்கு நாற்பது ரூபாய். சிகிச்சைக்குத் தனிப்பணம், மருத்துவமனை நிர்வாக டாக்டருக்கோ அவனது சகாக்களுக்கோ சைக்யாட்ரிஸ்ட்டிடம் அவனைக் காட்டவேண்டும் என்ற எண்ணமோ அவனைப் பேச விட்டுக் கேட்க வேண்டும் என்ற தொழில் அக்கறையோ வாங்கிய பணத்தில் ஒரு சதவிகித அளவிற்குக் கூட வரவில்லை.
சுயம்பு, அந்தச் சேலை கட்டி ரகளை நடத்திய மறுநாளே சேரவில்லை. மரகத்திற்கு என்று வைக்கப்பட்ட பணத்தை எடுக்க கறார் பேர்வழியான பிள்ளையாருக்குப் பிடிக்கவில்லை. அதோடு, நாட்டு வைத்தியம் பார்த்தார்கள். தலைக்குத் தைலம், வாய்க்கு அரிஷ்டம், கையில் ஒரு தாயத்து... யாராவது செய்வினை வைத்திருப்பார்கள் என்று ஒரு பூஜை. அப்படியும்