காவல் துறையினர் சொல்வார்களே, நிலைமை ‘கட்டுக்குள்’ இருப்பதாக, அப்படிப்பட்ட நிலைமை சுயம்புவின் சொந்தக் குடும்பத்தின் நிலைமை.
சுயம்பு காணாமல் போயும், மரகதத்தின் கல்யாணம் ரத்தாகியும் ஐந்தாறு நாட்களாகி விட்டன. ஆறுமுகப் பாண்டி, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வயலுக்குப் போகத் துவங்கிவிட்டான். எங்கேயோ கண் காணாத சீமைக்குப் போன பிள்ளையாரும் ஊர் திரும்பி விட்டார். அவரது மருமகள் கோமளமும், மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பத் துவங்கிவிட்டாள். அக்காளின் கல்யாணம் நின்ற மறுநாள் காலையிலேயே, டவுனில் காதலனைக் காணவந்த மோகனா, அண்ணனைப் பார்த்ததை மூச்சு விடவில்லை. அவள் குட்டும் வெளிப்பட்டுவிடும் என்ற பயம். தாய்க்காரி வெள்ளையம்மா கூட, சரியாய்ச் சாப்பிடத் துவங்கி விட்டாள். ஆனால் ‘அன்னம் தண்ணி’ அதிகமாய் இறங்காமல் கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடப்பவள் மரகதம் மட்டுமே. வெள்ளையம்மா அவ்வப்போது, மோகனாவின் துணையோடு, அவள் வாயைப் பலவந்தமாகத் திறந்து நீராகாரத்தையும், குழைத்துக் கரைத்த அரிசிக் கஞ்சியையும் ஊற்றி விடுகிறாள்.
அந்த ஆறுமுகப்பாண்டி, மாட்டுத் தொட்டியில் புண்ணாக்கைப் போட்டு, பனைமட்டையால் கலக்கிக் கொண்டிருந்தான். கோமளம் பள்ளிப் பயலுக்குத் தலை சீவிக்கொண்டிருந்தாள். வெள்ளையம்மா பாயில் கிடந்தாள். மோகனா பள்ளிக்குப் போனதாகக் கேள்வி. பிள்ளையார்கூட வயலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தார். அப்போது -
உயரமான ஒருவனும், தடியான ஒருவனும் இவர்களுக்கிடையே ஒரு பெண்ணுமாக அங்கே வந்தார்கள். கோமளம், எழுந்திருக்கும் முன்பே, பிள்ளையார் அடையாளம் கண்டார்.
“வாப்பா முத்து, தம்பி நீங்க என் மகனைக் கொண்டு வந்து.... எங்கிட்ட விட்டீங்களே, டேவிட் என்கிறது நீங்கதானே... வாப்பா. சரி... சரி... நீ யாராயிருந்தா என்னம்மா. என் வீட்டுக்கு வந்ததே பெரிசு. உங்கள நிக்கவச்சே பேசறேன் பாருங்க...”
திண்ணையில் படுத்துக் கிடந்த வெள்ளையம்மா தட்டுத் தடுமாறி எழுந்து உள்ளே போனபோது,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.