பிள்ளையார் அங்குமிங்குமாய்க் கிடந்த மூன்று நாற்காலிகளை ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கொண்டு வந்து போட்டார். ஆறுமுப்பாண்டி, பனை மட்டையைப் போட்டுவிட்டு, அவசர அவசரமாய்க், கை கால்களைக் கழுவினான். அந்த வீட்டில், தாய்ப் பிள்ளையாய்ப் பழகிய முத்து, உள்ளே போனான். அவன் போன நிமிடத்திலேயே புலம்பல். மரகதத்தின் ஒப்பாரி... ‘வா... முத்துத் தம்பியா’ என்ற திட வார்த்தைகளுக்குப் பிறகு, அத்தனையும் திரவ வார்த்தை.
“எப்பா... என்கூடப் பெறக்காத பெறப்பே! எனக்குக் கலியாணமும் வேண்டாம். கருமாதியும் வேண்டாம்பா... நான், இப்படியே இருந்துட்டுப் போறேன்பா... என் ஆசைத்தம்பியை என் கண்முன்னால கொண்டு வந்து நிறுத்துனா... அதுவே எனக்குப் போதும்பா... ஒனக்கு கோடிப்புண்ணியம்ப்பா என் தம்பி... என் கூடப் பிறந்த பிறப்பே... நீ எங்கே இருக்கியோ... எப்படித் துடிக்கியோ, இந்தப் பாவியே ஒன்ன விரட்டிட்டேனடா... உயிரோட கொலை செய்துட்டேனடா!”
“அழாதக்கா... அழாதே. அவனை ஒங்க கண்ணு முன்னால நான் கொண்டு வந்து நிறுத்துறேன்கா!”
“நீ ஆறுதலுக்குச் சொல்லுறே தம்பி... என் கூடப் பிறந்த பிறப்பு வரவே மாட்டான். வருவானா முத்து?”
“வருவான்கா... வருவான்!”
ஊனுருகக் கத்திய மரகதம், மேற்கொண்டு கத்த முடியாதவள்போல் சன்னஞ் சன்னமாய் சத்தமடங்கி, முனங்கலாய் இழுத்து, தன்னை முடித்துக் கொண்டவள் போல் கிடந்தாள். பிள்ளையார்தான் வெளியே இருந்த படியே ‘சத்தம்’ போட்டார்.
“நாமும் என்ன சும்மாவா இருக்கோம். தேடாத இடமே கிடையாது. பேப்பர்ல போடாத குறைதான். எந்தத் திசையில் போனான்னு தெரிஞ்சாலாவது அந்த திசையைப் பார்த்துப் போகலாம். எங்க போயிட்டு வறே மோகனா... உன் அண்ணன்மாருக்கும் அக்காளுக்கும் மோரு கொண்டுவா.”