டேவிட், கோமளத்தைப் பார்த்துக் கையாட்டிவிட்டு, பிள்ளையாரை நோக்கிப் பேசினான்.
“வேண்டாங்கையா... காபி கொடுங்க போதும்... வழில கொஞ்சம் வேலை இருக்கு... கலியாணத்துக்கு வந்த மூர்த்தி என்கிட்ட நடந்ததைச் சொன்னாரு... சொந்த அக்கா கலியாணமே நின்னது மாதிரி அழுதாரு... ஓங்க மகன் சுயம்பு எனக்கு சில லெட்டர்களை எழுதியிருந்தாரு... அவரு நடையுடை பாவனை... எல்லாவற்றையும் கணக்குல வச்சுப் பார்த்தப்போ... ஒங்க மகனால் சேல கட்டாம இருக்க முடியாது என்கிறதும், அவருக்கு எந்தப் பொண்ணோடயும் கலியாணம் காட்சி இருக்க முடியாது என்பதும், புரிஞ்சுது. அவர் தானாச் செய்யலை! உடம்போட உள்ளுறுப்புக்கள் அப்படிச் செய்ய வைக்குதுங்க.”
ஆறுமுகப்பாண்டி, துண்டால் கையைத் துடைத்தபடியே, அங்கே வந்தான். இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே “அப்போ இவனக் குணப்படுத்தவே முடியாதா தம்பி... இது பரம்பரைக் குணமோ...” என்று கேட்டான். அவனுக்கும், ஒரு வேகம். தம்பிக்கு வந்தது தனக்கும் வந்துவிட்டதாக அவள் கூசாமல் சொன்னது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம். ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே என்று ஒரு நடுக்கம். ஆகையால் அவன் மேற்கொண்டு பேசாமல் இருந்தபோது, டேவிட் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டான்.
“பிரமிளா... நீங்க கொஞ்சம் உள்ளே போயி, அக்காவுக்கு ஆறுதல் சொல்லுங்க. நாங்க வெளியிலப் போய் பேசுறோம்...”
தகப்பனும், மகனும், முத்துவும் டேவிட்டும் ஒருசேர நடந்தார்கள். வேப்ப மரத்தடிக்கு வந்தார்கள். அவர்களை எங்கே உட்கார வைப்பது என்ற பிரச்னை பிள்ளையாருக்கு, ஆனால், டேவிட்டோ வேப்பமர வேரில் போய் உட்கார்ந்து கொண்டதைப் பார்த்தவர், அவனுக்கு முன்னால் துண்டை விரித்து தரையில் உட்கார்ந்தார். ஆறுமுகப்பாண்டி, தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து, வைக்கலோடு சேர்த்து, முத்துவுக்குப் போட்டான். பிறகு தானும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்.
டேவிட் அவர்களுக்கு விளக்கினான்: