“பிரபஞ்சம் ஒரு கடல் என்றால், இந்த பூமியை நிசமாகவே ஒரு துளி என்று சொல்லாம். ஆனாலும், தனித்துளி. இதுல பல அதிசயங்கள். இருபத்தாறு லட்சம் வகை உயிரினங்கள். இவை ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், சங்கடங்கள். பொதுவாய் இருபத்தாறு லட்சம் உயிரினத்துக்கும், இருபது வகை புரோட்டீனும், அதிலுள்ள அறுபத்து நாலுவகை சத்துக்களுமே ஆதாரம். அத்தனை சீவராசிகளும், ஜெனடிக்கோட் - அதாவது பிறப்பியல் முறைமைப்படியே இயங்குகின்றன. அத்தனை சீவராசிக்கும் நாலெழுத்து எனப்படும் ஒரு உயிரினக் கோட்பாடே ஆதாரம்! சரி, நுட்பமான விஷயம் வேண்டாம். நீங்க சுயம்பு பிரச்னையைத் தெரிஞ்சுக்கணும் என்கிறதுக்காகவும் ஒங்களுக்கும் ஒரு தெளிவு வரணும் என்கிறதுக்காகவும் நான் பேசறேன். நீங்க விழிக்கிறதைப் பார்த்தால் ஒங்களுக்குப் புரியல... எதுக்கும் வைக்கேன்!”
“இந்த ஜீவராசிகள் சுற்றுப்புறச் சூழலில் உள்ள கார்பன், ஹைடிரஜன், நைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றை உட்கொண்டே பிழைக்கின்றன. ஆனால், இயற்கை எந்த சீவராசியையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வளர்த்து, தனது கார்பன் போன்ற சக்திகளை இழக்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்லாமல், இயற்கை ஒரு உயிரை மட்டுமல்ல, ஒரு உயிரின வகையையும் அழிக்கப் பார்க்கிறது. இப்படிப் பலவகை உயிரினங்கள் அழிந்து போயும் உள்ளன. இந்த நிலமை ஏற்படாதிருக்க, உயிரினங்களும், இயற்கையை ஒரு வகையில் ஏமாற்றுகின்றன. எவ்வளவு சீக்கிரம் இனவிருத்தி செய்யணுமோ, அவ்வளவு சீக்கிரம் இனவிருத்தி செய்து விட்டு, மரணமடைகின்றன. மனிதன் இறந்தாலும், மானுடம் நிற்பது இப்படித்தான். இயற்கையும், ஒரு வகையில் முயற்சி திருவினையாக்கும் காரியங்களுக்கு உடன்படுகிறது. ஒரு பூச்சி, ஒரு பூவில் முட்டையிட்டுவிட்டு, அந்த முட்டையின் பாதுகாப்புக்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையையும் ஏற்படுத்துகிறது. அந்த முட்டையின், முதிர்ச்சியும் பூ பழமாவதும் ஒரே காலகட்டத்தில் நிகழ்கின்றன. பூச்சிகளுக்கு, இன்ன பூக்களில்தான் முட்டையிட வேண்டும் என்பது தெரிகிறது. பூக்களுக்கும் இன்ன பூச்சிதான் வர வேண்டும் என்றும் புரிகிறது. அதனால்தான், எல்லா மலர்களும் ஒரே சமயத்தில் மலர்வதில்லை. எல்லாப் பூச்சிகளும், ஒரே சமயத்தில் பறப்பதில்லை!
“இத்தகைய இனவிருத்தி உத்திகள், மனிதனுக்கும் பொருந்தும். மற்ற சீவராசிகளைப் போல், குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் இனச்சேர்க்கை செய்பவன் அல்ல மனிதன். இவனுக்கு, எக்காலமும் சம்மதமே. ஆகையால், இந்த மானுட சேர்க்கையால் ஏற்படும் இனவிருத்திப்