Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 03- சரோஜா ராமமூர்த்தி
நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது. "இந்தப் பொண்ணுக்கு எப்ப விடியப் போறதோ" என்று சொல்லிக் கொண்டே தான் நர்மதாவின் தாய் வெங்கு லட்சுமி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொரு வளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங்களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர். அதிலே சாயிராம் என்று ஒருத்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
நர்மதா? ஒரு டம்ளர் பானை ஜலம் கிடைக்குமா? நர்மதா? சூடா காப்பி இருந்தா கொடேன்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து உட்காருவான். வெங்குலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வரும். சந்தனச்சிலைக்கு தைத்துப் போட்ட மாதிரி கை பிதுங்கி வழிய ரவிக்கை போட்டுக் கொண்டு அவனுக்கு பானை ஜலமும், சூடான காப்பியும் கொண்டு வந்து கொடுப்பாள் நர்மதா. அவன் தயவு அவர்களுக்கு வேண்டி இருந்தது. பெரிய பெரிய புள்ளிகள் அவனுக்கு சிநேகம். அவர்களின் வீட்டில் சமைக்க பொரிசு செய்து அனுப்புவான்.
"நீயும் கூட. போயேன் நர்மதா எண்பான் சாயிராம் "
எல்லாங்கிடக்க அவன் எதுக்கு.."
"வரட்டும் மாமி! நாறு பெரிய மனுஷாள தெரிஞ்சுண்டா நல்லதுதானே''
"அவ எந்த மனுஷாளையும் தெரிஞ்சுக்க வாண்டாம் "
நர்மதாவுக்கு சினிமா என்றால் உயிர். ஓசிப் பாஸ் கொண்டு வந்து கொடுப்பான் சாயிராம்.
ஒரு தடவை வெங்குலட்சுமி தலையில் மடேர் மடேர் என்று போட்டுக் கொண்டு ஊமை அழுகையாக அழுதாள்.
"பாவிப் பெண்ணே! உடம்பும், நீயும் செதுக்கின பொம்மை மாதிரி இருக்கியே. அதைப் பாத்துட்டு அவன் இளிச்சிண்டு இளிச்சிண்டு வராண்டி. ஏமாந்துடாதேடி சினிமாவும் வேண்டாம். இனிமே