Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 07 - சரோஜா ராமமூர்த்தி
மாலை நான்கு மணிக்கு பட்டப்பாவும், நர்மதாவுமே வந்தார்கள்.
"அக்கா எங்களை சினிமாவுக்குப் போகச்சொன்னா என்றான் பட்டப்பா.
"நல்ல காதல் சினிமாவா கூட்டிண்டு போ..." என்றான் பாலு.
"காதல்லே நல்ல காதல், கெட்ட காதல்னு இருக்கா என்ன? ஓண்ணு காதல்னு இருக்கு, இல்லை காமம்னு கேட்டிருக்கேன். முந்தினது உயர்வானது. பிந்தியது மட்டமானது" பூரணி சிரித்தபடி சொன்னாள்.
”இப்ப சினிமாவிலே காதல் வரதில்லை. காமம்தான் ஜாஸ்தியா இருக்கு. அதுவும் ஆண்கள் கற்பழிக்கவே - அந்த ஒரு காரணத்துக்காகவே பிறந்த மாதிரி - பிறந்தவர்கள் என்கிற நிலையில், 'ரேப்' காட்சிகள் இல்லாமல் சினிமா இல்லை. நடிப்பாக இருந்தாலும் அந்தக் காட்சிகளில் எனக்கு வருத்தமாக இருக்கும். கடவுள் பெண் வர்க்கம் என்று ஒன்றை ஏன் திருஷ்டி செய்தான் என்று நினைப்பேன். பொம்மனாட்டியை மிகவும் கேவலப்படுத்தற மாதிரி சம்பந்தமில்லாம இந்தக் கண்றாவியைப் பார்க்க வேண்டியிருக்கு" திரும்பவும் படபட வென்று பேசினாள் பூரணி.
பேச்சிலே அவள் ரொம்பக்கெட்டிக்காரி. நர்மதா அசந்து போய் நின்றாள்.எந்த விஷயத்தையும் லஜ்ஜைப்படாமல், வெகுளித்தனமாய் அவள் பேசுவதை ரசித்தாள்.
"நீங்களும் வாங்கோ” என்று அழைத்தாள் நர்மதா.
"நீ போடி... நாங்க எதுக்கு? ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ஞ்சு ஒரு பிள்ளை பெத்துக்கப்போறேன். கொஞ்சம் நிம்மதியா படுத்துத்தூங்கணும். இவர் காப்பி காப்பின்னு எடுத்துட்டார். நீ ஜாலியா போயிட்டு வா'
"நீங்க வாங்களேன் சார்" பட்டப்பா பேசினான்.
"போயிட்டு வாங்க... கொஞ்சம் அவாளைத் தனியா விட்டுட்டு உட்காருங்கோ"