Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 08 - சரோஜா ராமமூர்த்தி
கங்கம்மா விதவிதமாகப் பலகாரங்கள் செய்து நர்மதா வையும் பட்டப்பாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
"மசக்கைன்னு பொறந்தாத்துத்குப் போவா. நீ வெறுமனே போறே. திரும்பி வரச்சேயாவது.... "
நர்மதாவுக்கு கேட்டுக் கேட்டு இந்த வார்தைகள் அலுப்பைத் தந்தன. பூரணியும் இதைக்கேட்டு மனம் சலித்து நின்றாள்.
திடீரென்று வந்து நிற்கும் பெண்ணையும், மாப்பிள்ளையையும் பார்த்து வெங்குலட்சுமி பூரித்தாள். "நன்னாப் பெருத்துட்டேடி. புதுசிலே அப்படித்தான் இருக்கும்... அவன் தான். அப்படியே இருக்கான். அவனுக்கும் சேர்ந்து நீ பெருத்துட்டே"
நர்மதா எப்போதும் போலத் தான் இருந்தாள். மகளின் சோர்வைக் கூட அவள் கவனிக்கவில்லை.
அண்ணாவுக்குப் பணக்காரத் தங்கை வந்திருக்கிறாள். அவள் செலவில் நிறைய சினிமா பார்க்கலாம் என்று நினைத்தான். பட்டப்பா உடனே கிளம்பிவிட்டான். அங்கே இங்கே கடன் வாங்கி மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தாள் வெங்குலட்சுமி.
நர்மதா வந்திருப்பது எப்படியோ சாயிராமுக்குத் தெரிந்து விட்டது.
"என்ன சமர்ச்சாரம்?" என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தான்.
"சொல்லுங்கோ"
"நீதான் சொல்லணும். புதுசா கல்யாணம் பண்ணிண்டு புருஷனோட இருந்துட்டு வந்திருக்கே. புதுப்புது அனுபவங்கள்"
'இந்த அனுபவங்களை அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் .... சே... என்ன கேவலமான புத்தி..."