நீலக்கொக்கு - பூஜா
திப்பிராஜபுரம் அப்பிடின்னு ஒரு ஊர்.அந்த ஊர்ல பெரிய பணக்காரன் ஒருத்தன் இருந்தான்..அவன்
பெயர் பெருந்தனன்.அவன் யாரையுமே மதிக்கமாட்டான்.யாருக்கும் எந்த உதவியும் செய்யமட்டான்.மிகவும் பேராசைக்காரன்.அதுவும் ஏழைகளை அவன் மதிக்கவே மாட்டான்.
ரொம்ப கருமி.தான் பெரிய பணக்காரன்ற திமிரு அவனுக்கு.ஊர்லயும் யாருக்குமே அவன பிடிக்காது.
ஒரு சமயம் திடீர்ன்னு அந்த ஊர்ல பஞ்சம் வந்திடுச்சு.குடிக்க தண்ணியும் இல்ல..சாப்பிட உணவும் இல்ல..ஆனாலும் அந்த ஊர் ஜனங்க ஒத்துமையா ஆண்டவன பஞ்சம் தீரவும்,எல்லோர்க்கும் சாப்பிடஉணவு கிடைக்கவும் தினமும் ப்ரே பண்ணினாங்க.யாரும் அந்த ஊரைவிட்டுப் போகணும்னு
நினைக்கல.ஆனா இந்த பணக்காரன் பெருந்தனன் மட்டும் வெளியூருக்குப் போய் நிறைய சம்பாதிக்கணும்னுநினைத்தான்.தன்னோட மனைவியையும் ,மகனையும் ஊர்லயே இருக்கச் சொல்லிவிட்டு தான்மட்டும் பணம் சம்பாதிக்க புறப்பட்டான்.
ஊரைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டான் பெருந்தனன்.நடந்தே வந்ததால் மிகவும் களைப்பாகவும்,
பசியாகவும்,தாகமாகவும் இருந்தது அவனுக்கு.எங்கேயாவது தண்ணீர் கிடைக்காதா என்று
தேடிய அவனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்த குளம் ஒன்று கண்களில் பட்டது.மிகுந்த ஆவலோடு
அக் குளத்தை நோக்கிப் போனான்.
குளத்தை நெருங்கிய அவனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.குளத்தின் கரையில் அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.அவன் வாய் தாமாகவே அகலத் திறந்து கொண்டது.
கண்கள் மூட மறுத்தன.ஆம் அந்தக் காட்சியைக் கண்டு அவன் அதிசயத்துப் போனான்.
ஆம் அங்கே ஒரு கொக்கு..அதுவும் ஆகாய வண்ணத்தில் நீல நிறமாக.அதுவும் அது சாதாரணக் கொக்கு போல் இல்லாமல் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தது.அது மட்டுமல்லாது அதன்
உடல் முழுவதும் தங்க,வைர,முத்துக்களால் செய்யப்பட்ட நகைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.
நகைகளால் அந்தக் கொக்கின் உடம்பே டாலடித்தது.அதன் முதுகில் பட்டாலான ஆடையொன்று போர்த்தப்பட்டிருந்தது.அந்தப் பட்டாடையிலும் தங்கமும் வைரமும் முத்தும் பவளமும் மின்னின.
"ஆ"வென்று அக்கொக்கை பார்த்த பெருந்தனனுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.அவனின்
பேராசை மனது வேலை செய்ய ஆரம்பித்தது.என்ன திட்டம் போட்டானோ அவனுக்குத்தான் தெரியும்.சட்டென ஆ,அம்மா,ஐயோ என்று கத்தியபடி கீழேவிழுந்தான்.எல்லாம் அந்தக் கொக்கின் கவனத்தைத் தன்பால் திருப்பத்தான்.இவன் திட்டம் பலித்தது.சட்டென அந்தக் கொக்கு சத்தம் வந்த
திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தது.
பாவம் அந்தக் கொக்கு.மிகவும் நல்ல கொக்கு போலும்.கீழே விழுந்தவனை நோக்கி ஓடி வந்தது.
கொக்கு தன்னை நோக்கி ஓடி வருவதை லேசாகக் கண்களைத் திறந்து பார்த்த பெருந்தனன்..ம்ம்ம்
அம்மா..பசியும் தாகமும் தாங்க முடிய வில்லையே..தண்ணீர்..தண்ணீர்..என்று முனகினான்.
அவனின் அருகில் வந்த கொக்கு அவன் தண்ணீர்..தண்ணீர் என்று முனகுவதைப் பார்த்து பாவப்படது.கிடுகிடுவென குளத்தை நோக்கி ஓடியது.தன் நீண்ட அலகில் தண்ணீரை எடுத்துக்கொண்டு இவனிடம் ஓடி வந்தது.கொக்கு தண்ணீர் எடுத்துவருவதைப் பார்த்த அவன் வாயைத்திறந்தபடி படுத்துக்கிடந்தான்.
ஓடி வந்த கொக்கு இவனின் வாயில் தண்ணீரை ஊற்றியது,கொஞ்சம் நீரை முகத்தில் பீய்ச்சியது.
மயக்கம் தெளிந்தவன் போல சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான் பெருந்தனன்.
முகத்தை நல்லவன் போல் வைத்துக்கொண்டு கைகளைக்கூப்பி கொக்கே உன்னைப் பார்த்தால்
தெய்வக் கொக்கு போல் இருக்கிறது.சரியான சமையத்தில் என்னைக் காப்பாற்றினாய்..எப்படி
உனக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன் என்றான்.வேண்டுமென்றே கண்களில் கண்ணீரை வரவழைத்துக்கொண்டான்.
பரவாயில்லை..மனிதா..நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம்..ஆபத்தில் உதவுவதுதானே ஒவ்வொருவரின் கடமை....என்றது கொக்கு.அட இது என்ன கொக்கு பேசுகிறதே என்று அதிசயத்துப்
போனான் பெருந்தனன்.இந்தக் கொக்கை எப்படியாவது ஏமாற்றி இது அணிந்திருக்கும் நகைகளையெல்லாம் அபகரித்துக் கொண்டு சென்று விடவேண்டும் என்ற பேராசை அவன் மனதில் எழுந்தது.எப்படியாவது கொக்கோடு நட்பு ஏற்படுத்திக்கொள்ள நினைத்தான்.கொக்கு பாவம் இவனின்
கெட்ட எண்ணத்தை அறியாமல் மேலும் பேச ஆரம்பித்தது.
மனிதா..உங்களைப் பார்த்தால் வெகு தூரத்திலிருந்து வருவதுபோல் தெரிகிறது..ஏன் இப்படி கால் நடையாக வந்தீர்கள்..என்று கேட்டது.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என நினைத்த பெருந்தனன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக்கொண்டு என் உயிரைக்காப்பாற்றிய கொக்கே என் சோகக்கதையைச் சொல்கிறேன் கேள்.
நான் ஒரு ஏழை விவசாயி...எங்கள் ஊரில் கடும் பஞ்சம் .பிழைக்க வழி இல்லை.என் மனைவியும் மகனும் நானும் பல நாளாய் பட்டினி கிடக்கிறோம்.ஆடு மாடுகளெல்லாம் தீவனமின்றி இறந்து விட்டன.அதனால் எங்கேயாவது வேலை கிடைக்காதா? பணம் கிடைக்காதா என்று தேடி வந்தேன்.
பல நாள் பட்டினியால் என் உடலில் தெம்பில்லை..அதனால்தான் நான் மயங்கி வீழ்ந்துவிட்டேன் என்றான் மிக ஈனஸ்வரத்தில் கொக்கு நம்பவேண்டும் என்பதற்காக.
கொக்கின் மனம் இவனின் கதைகேட்டு மிகவும் இளகி விட்டது.ஐயோ பாவம் இந்த மனிதனுக்கு
உதவ வேண்டும் என எண்ணியது.கவலைப் படாதே என் ஆறுதல் கூறியது.
கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்வது போல் சொன்னது.அடுத்த நிமிடம் ஓர் அழகிய
தேவதை ஒன்று அங்கே தோன்றியது.அதன் கையில் மந்திரக்கோல் இருந்தது.
மகனே என்னை ஏன் அழைத்தாய் என்று கொக்கைப் பார்த்து கேட்டது அந்த தேவதை.
தாயே..இதோ இருக்கிராறே இவர் வாழ்க்கையை நடத்த முடியாமல் பெரும் துன்பத்தில் இருக்கிறார்.
இவருக்கு உதவவேண்டுமென நான் விரும்புகிறேன்..அதற்கு நீங்கள்தான் தாயே உதவ வேண்டும் என்றது கொக்கு.
மகனே..உன் எண்ணம் உயர்வானது..ஆனால் மனிதர்களை நம்புவது அவ்வளவு நல்லதல்ல என்றது
தேவதை.
ஆனால் கொக்கு பிடிவாதமாய் இருந்ததால்..தேவதையால் செய்யாமல் இருக்க முடியவில்லை.
வேறு வழியின்றி பெருந்தனனுக்கு உதவ முன்வந்தது.
கையில் இருந்த மந்திரக்கோலால் காற்றில் ஒரு வட்டம் போட்டது.என்ன அதிசயம் அங்கே ஒரு
மாட மாளிகையும் ஒரு மூட்டை நிறைய தங்க வைர நகைகளும் ஏராளமான பசுக்களும்,ஆடுகளும்
பெட்டிபெட்டியாய் தங்கக் காசுகளும் தோன்றின.கொக்கு எல்லாவற்றையும் பெருந்தனனை எடுத்துக்கொள்ளச் சொன்னது.
பெருந்தனனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.தன் மனைவி,மகனையும் அழைத்துவந்து வாழத்
துவங்கினான்.கொக்கும் அடிக்கடி அவன் வீட்டிற்கு வந்து பொழுதைக் கழித்துவிட்டுச் செல்லும்.
பேராசை கொண்ட பெருந்தனனுக்கு இவ்வளவு செல்வம் கிடத்தும் போதவில்லை.அவன் நோக்கம்
கொக்கின் உடலில் இருக்கும் நகைகளைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.அதற்கான நேரத்திற்காக காத்திருந்தான்.பாவம் கொக்குக்கு இவ்னின் கெட்ட எண்ணம் தெரியவில்லை.அவனை நல்லவன் என்றே நம்பியது.
பெருந்தனன் தன் மனைவி, மகனோடு சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.
அன்று வழக்கம் போல கொக்கு பெருந்தனன் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்தது.தீய எண்னம் கொண்ட பாவி பெருந்தனன் கொக்கை வஞ்சகமாகப் பேசி ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்திற்கு
அழைத்துச் சென்றான்.கொக்கு சற்றும் எதிர்பாராத நிலையில் தன்னோடு வந்திருந்த மகனை கொக்கின் கால்களைப் பிடித்துக்கொள்ளச்சொன்னான் மனைவியை அதன் உடலைக் கெட்டியாகப்
பிடித்துக்கொள்ளச் சொன்னான்.கொக்குக்கு ஒன்றும் புரியவில்லை.எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று பதறிப்போய் கேட்டது.ஹோ..ஹோ..என்று சிரித்துக்கொண்டே அதன் உடலிலிருந்து ஒவ்வொரு நகையாய்க் கழற்ற ஆரம்பித்தான் பெருந்தனன்.உன்னைக் கொல்லப்போகிறேன் என்றான் கொஞ்சமும் இரக்கமில்லாமல்.பயந்து போனது அந்த கொக்கு.மனிதனை நம்பாதே என்று தாய் சொன்னது நினைவுக்கு வந்தது.மனதுக்குள் தாயை நினைத்தது.
அடுத்த நொடி அதன் தாய் தேவதை அங்கே தோன்றியது.அதற்கு பெருந்தனனும் அவன் மனைவி,மற்றும் மகன் செய்யப்போகும் கொடுஞ்செயல் புரிந்துபோயிற்று.பெரும் சினம் கொண்டது.
கையில் இருந்த மந்திரக்கோலால் மூவரையும் தொட்டது.மூவரும் தள்ளிப்போய் கீழே விழுந்தனர்.
உங்களுக்கு உதவி செய்த என் மகனைக் கொல்ல நினைத்து செய்னன்றி மறந்தீர்கள்.உங்களை உண்மையானவர்கள் என்று நம்பி நட்போடு பழகிய என் மகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள்.
நீங்கள் மூவரும் இனி வாழத் தகுதியற்றவர்கள்.நீங்கள் மூவரும் கருங்கல்லாய் மாறக்கடவது என
உங்களைச் சபிக்கிறேன்.இந்தக் குளத்திற்கு குளிக்க வருபவர்கள் இனி கருங்கல்லாய் மாறிய
உங்கள் மீது தங்கள் துணிகளை அடித்துத் துவைப்பார்கள்.அந்த அடி உங்களுக்கு வலிக்கும்.
நீங்கள் வலி தாங்காமல் கத்துவீர்கள். அனால் யாருக்கும் உங்களின் கத்தல் கேட்காது.நீங்கள்
காலம் காலமாய் இந்த தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று சாபமிட்டது.அடுத்த கணம் மூவரும்
கருங்கல்லாய் மாறி குளத்துத் தண்ணீர் அருகே போய் விழுந்தனர்.கொக்கு தன் தாயோடு பத்திரமாய் சென்றது.
செய்நன்றி மறந்தவர்க்கும்,நம்பிக்கை துரோகம் செய்பவர்க்கும்,பேராசை கொண்டவர்க்கும் இதுதான் கதி.
நான் பூஜா 3rd std.,நீலக்கொக்கு என்ற இந்தக் கதய எழுதிருக்கேன்.நன்னா இருக்கா?..ஒங்களுக்குப் புடுச்சிருந்தா இன்னும் எழுதுவேன்..பை..பை.. நன்றி..
{kunena_discuss:875}