(Reading time: 11 - 21 minutes)

பஞ்சவர்ண தவளை பேரு... ஜெயசூர்யா... - தங்கமணி சுவாமினாதன்

ஹாய்..குட்டிப்பொண்ணுங்களா..குட்டிப் பையன்களா...குறும்புபண்ணாம உக்காந்திருந்தாதான் கதை சொல்லுவேன்..என்ன சரியா?கீர்த்தனா ஒனக்கு இன்னிக்கு என்ன கதை வேணும்?என்ன.. ராஜா ராணி கதையா? வைபவ் ஒனக்கு?மந்திரவாதிக்கதையா? சரி ராஜா ராணிக்கதைல மந்திரவாதி வராப்ல ஒரு கதைசொல்றேன்..ஓகேவா?அங்கென்ன?.. சித்ரா எதுக்கு தேன்மொழி ஜடையப் புடிச்சி இழுக்குற?இங்க பாரு விந்த்யா,ஷாரோன்,நந்தினி சந்தியா,சாந்தி,மீரா எல்லாரும் எப்பிடி சமத்தா ஒக்காந்திருக்காங்க..அனுஷாவப் பாரு எவ்வளவு குட் கேளா இருக்கா நீயும் அப்பிடி இருக்கணும் சரியா..குட்...

அழகாபுரின்னு ஒரு நாடு.பேருக்கு ஏத்தபடி அது ரொம்ப அழகான நாடு.அந்த நாட்டு ராஜாவோட பேரு வீரவர்மன்.ராஜாவோட பேரு என்ன?வீரவர்மன்..கரெக்ட்..சரியா சொன்னீங்க...அந்த ராஜா ரொம்ப நல்லவரு.அவருக்கு மூணு மனைவிங்க..மனைவின்னா என்னவா?மனைவின்னா பொண்டாட்டி.மொதப் பொண்டாட்டி இருக்காங்கள்ள அவங்க ரொம்ப ரொம்ப நல்லவுங்க.தான் ஒரு ராணிண்ணு அவங்களுக்கு கர்வமே கெடையாது.எல்லார்ட்டையும் சாதாரணமா பேசுவாங்க.எல்லாருக்கும் ஹெல்ப்பு பண்ணுவாங்க.ராஜாக்கும் அந்த ராணியக் கண்டா ரொம்பப் புடிக்கும்.அவங்களுக்கு ஒரு மகன்.அவன் பேரு ஜெயசூர்யா.என்ன சூர்யா?கரெக்டா சொல்லிட்டீங்களே?குட் அவன் பேரு ஜெயசூர்யா...அவன் ரொம்ப நல்ல பையன்..ரொம்ப புத்திசாலி, அம்மா அப்பா பேச்ச தட்டவே மாட்டான்.நீங்கள்லாமும் ஒங்க அம்மா அப்பா பேச்ச கேப்பீங்கள்ள..?

குட் பாய்ஸ் குட் கேள்ஸ்.

Frogசரி கதைக்கு வருவோம்.அந்த ராஜாவோட மத்த ரெண்டு பொண்டாட்டியும் இருக்காங்கள்ள அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கெட்டவங்க .ரொம்ப திமிர் பிடிச்சவங்க.அவங்களுக்கு ராஜாவோட மூத்த  மனைவிய பிடிக்கவே பிடிக்காது.கெட்டவங்களுக்கு எப்பவுமே நல்லவங்கள பிடிக்காதுதானே?

அந்த ரெண்டு கெட்ட ராணிங்களுக்கும் ஒவ்வொரு மகன் இருந்தாங்க.இப்ப சொல்லு ஷாரோன் ராஜாக்கு எத்தன மனைவிங்க?மூணுன்னு சரியா சொல்லிட்டயே..வெரி குட்.தேன்மொழி நீ சொல்லு ராஜாக்கு எத்தன மகன்க? மூணு...சரியா சொல்லிட்டயே..குட்.கடைசி மகங்க ரெண்டுபேருக்கும் மூத்த அண்ணன் ஜெயசூர்யாவ புடிக்கவே புடிக்காது.அவங்க ரெண்டுபேரும் தங்களோட அம்மாவப் போலவே மோசமானவங்க.ராஜாவும் அந்த ரெண்டு மனைவிங்கள்டயும் அந்த ரெண்டு மகன் கள்ட்டையும் பல தடவ மூத்த ராணியும் ஜெயசூர்யாவும் ரொம்ப நல்லவங்க அவங்ககிட்ட ஒத்துமையா இருங்கன்னு சொல்லிப் பார்த்தாரு.அவங்க கேக்கவே இல்ல.அதுனால அவருக்கும் மூத்தராணிக்கும் ஜெயசூர்யாக்கும் ரொம்ப வருத்தம்.காலம் இப்பிடியே போய்க்கிட்டு இருந்திச்சி.

இப்ப மூணு ராஜ குமாரங்களுக்கும் வயசு இருபதுக்கு மேல ஆயிடுச்சி.ராஜாக்கும் வயசாயிடுச்சு.

அதுனால ஜெயசூர்யாவ ராஜாவாக்கிட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம்ன்னு நெனெச்சாரு.நாட்டு மக்களுக்கெல்லாம் ஒரே ஜாலி..ஜெயசூர்யா ராஜாவாகப் போராருன்னு.ஆனா இது மத்த ரெண்டு ராணிக்கும் அந்த ரெண்டு புள்ளைங்களுக்கும் புடிக்கல.அவங்களுக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சி ராஜா மேல.என்ன செய்யலாமுன்னு ரெண்டு ராணியும் ஒண்ணா சேந்து யோசிச்சாங்க.பயங்கரமா திட்டம் போட்டாங்க.அவங்களுக்கு ராஜாவக் கண்டாலும் புடிக்காம போயிடிச்சு.நல்லதா யாரும் அட்வைஸ் பண்ணினா அட்வைஸ் பண்றவங்கள புடிக்காதில்ல?ராஜாக்கு தெரியாம பல விதத்துலயும் பெரிய ராணிக்கும் ஜெயசூர்யாக்கும் எடஞ்சல் பண்ணிணாங்க.ஆனாலும் பெரிய ராணியும் ஜெயசூர்யாவும் அதெல்லாம் தாங்கிகிட்டாங்க.ராஜாட்ட சொல்லாம மறச்சாங்க .பாவம்தானே அவங்க?ஆச்சு ஜெயசூர்யாக்கு முடிசூட்ட இன்னும் கொஞ்ச நாளே இருந்துச்சு.

அரண்மணையே பாட்டு டான்ஸுன்னு அமக்களமா இருந்திச்சு.இது அந்த கெட்ட கும்பலுக்கு புடிக்கில.எல்லாருமா சேந்து ஒரு முடிவுக்கு வந்தாங்க.இதுல என்ன கொடுமையின்னா அவங்களோட மந்திரி ஒருத்தரும் சேந்துக்கிட்டாரு.அந்த மந்திரி ஒரு கெட்ட யோசன சொன்னாரு.

அது மத்த ரெண்டு ராணிங்க அவங்களோட பிள்ளைங்களுக்கு ரொம்ப புடிச்சிது.அந்த யோசன என்ன தெரியுமா?என்னவா இருக்கும் சந்தியா நீ சொல்லு?ஆமா..ஆமா..கரெக்ட்..மந்திரவாதிய கூப்படறது தான் அந்த யோசன.

அன்னைக்கி அமாவாசை... சுடுகாடு....நடு நிசி..ஹா...ஹா..ஹா..பயங்கரமா சிரிச்சான் மந்திரவாதி கார்க்கோடகன்..நெருப்பு குண்டத்துகிட்ட ஒக்காந்திருந்தான் அவன்.அவன் மூஞ்சி பாக்கவே பயங்கரமா இருந்தது...பெரிய பெரிய கண்ணு முழி..பெரிய ஆட்டுக்கிடா மீச...நெத்தீல பெரிய ரவுண்டு பொட்டு..கழுத்துல மண்டை ஓட்டு மாலை...வாயிலேந்து வழிஞ்சிகிட்டு இருந்திச்சு அவன் குடிச்ச ரத்தம்...ஹைம்..க்ரீம்..ஷ்ரீம்..ஷட் வட்..அப்பிடீன்னு கத்திக்கிட்டே ஒரு சட்டீலேந்து குங்கிலியத்த எடுத்து எரிஞ்சிக்கிட்டு இருந்த நெருப்பு குண்டத்துல போட்டான்.அது குபீர்ன்னு பத்தி எரிஞ்சிச்சு.ஒரே பொகையா வந்திச்சு..அப்ப.. அந்த பொகைலேந்து அதி பயங்கரமா ஒரு பூதம் எழுந்து வந்திச்சு.அட... நந்தினி சாந்தி அனுஷா எதுக்கு அழுவுறீங்க...பயமா இருக்கா?சும்மா கததானே..பயப்படக் கூடாது?பாருங்க.. கீர்த்தனா எப்பிடி பயப்படா  இருக்குறா?விஷால் ஒனக்கும் பயமா இருக்குதா?அங்க பாரு சித்ரா எப்பிடி பயப்படாம வெரப்பா ஒக்காந்திருக்கா?எல்லாருக்குமே பயமா இருக்கா?மீரா விந்த்யா தேன்மொழி ஷாரோன் ஒங்களுக்கெல்லாம் பயமா இல்லியா?பயமா இருக்கிறவங்கெள்லாம் எம் பக்கத்துல வந்து ஒக்காருங்க.ம்ம்ம்....இப்ப சரியா?அப்பறம் என்னாச்சு.. அந்த பூதத்துக்கிட்ட மந்ரவாதி ஏதோ சொல்லவும் அந்த பூதம் ஹா..ஹா..ஹான்னு கத்திகிட்டே எங்கியோ பறந்து போச்சு.

அந்த பயங்கரமான மந்திரவாதிய கெட்ட மந்திரி இருக்கான்ல அவன் அரண்மணைக்கு அழச்சுகிட்டு வந்தான்.அவன ராஜா,மூத்த ராணி ஜெயசூர்யா மூணு பேருக்கும் ஏதாவது மந்ரம் பண்ணி கெடுதல் பண்ணிடச் சொன்னாங்க மத்த ரெண்டு ராணியும் அவங்க ரெண்டு பிள்ளைங்களும்....நிறையா தங்கக் காசு தரதா சொன்னாங்க மதிரவாதிட்ட.அவனுக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சி.ஒடனே என்ன பண்ணினான் தெரியுமா..?பாவம்..அந்தராஜாக்கு மந்திரவாதி மந்திரம் பண்ணி கைகளையும் கால்களையும் மொடக்கிட்டான்..பாவம் ராஜா..படுத்தபடுக்கையா படுத்துட்டாரு.கெட்ட கும்பலுக்கு ஜாலியா ஆயிடுத்து.மூத்த ராணிய நாட்டவிட்டே தொரத்திட்டாங்க.ஜெயசூர்யாவ மந்திரவாதி என்ன செஞ்சான் தெரியுமா?சொல்லவே கஷ்ட்டமா இருக்கு....அவன..அவன..பஞ்ச வர்ண தவளயா ..மாத்திட்டான்.பஞ்ச வர்ணம்ன்னா என்னவா?நல்ல கேள்வி கேட்ட விந்த்யா..பஞ்ச ன்னா ஐந்துன்னு அர்த்தம் வர்ணம்ன்னா கலர்ன்னு அர்த்தம்.பஞ்சவர்ணம்ன்னா ஐந்துகலர்ன்னு அர்த்தம்.ஆமாம்..ஜெயசூர்யா அஞ்சு கலரான தவக்களையா மாறிட்டான்.அந்த தவளையோட முதுகுல பச்சை,மஞ்சள் ஆரஞ்சு,நீலம் வெள்ளைன்னு பட்டை பட்டையாஅஞ்சு கலர்கோடுங்க இருந்திச்சு.அதைபார்த்து கெட்ட கூட்டம் ஹெ..ஹெ..ஹென்னு சிரிச்சுது.அந்த பஞ்சவர்ண தவக்களைய   நாட்டுக்குக் கோடீல இருந்த ஒரு கொளத்துல கொண்டு போட்டுட்டாங்க.பாவம் ஜெயசூர்யா..இல்ல?பாவம்தானே...?

சரி..எல்லாரும்  வீட்டுக்குப் போய் சாப்ட்டுட்டு ..கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாங்க..சாயந்திரம் ஐஞ்சு மணிக்கு...ஃப்ரெஷாயிட்டு வாங்க..மீதி கதைய சொல்ரேன்..சரியா?வரும் போது ஊர்லேந்து ஜான்சி வந்தாச்சான்னு பாத்துட்டு வாங்க..சரியா..குட் கேள்ஸ்..குட் பாய்ஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.