செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன்
குட்டீஸ்...வாங்க வாங்க..ரொம்ப நாளாச்சு உங்களலெல்லாம் பாத்து..இன்னிக்கு எப்பிடியும் ஒரு கதை கேக்கணும்ன்னு வந்தீங்களா..அப்பிடியா?சரி சொல்றேன்.. கேளுங்க...
ஒரு ஊருல அன்பரசுன்னு ஒரு பையன் இருந்தான்.பாவம் அவனுக்கு அம்மா இல்ல.
சின்னமாதான் இருந்தா.அவ ரொம்ப பொல்லாதவ. அன்பரசுக்கு வயிறு ரொம்ப சாப்பாடே போடமாட்டா.அவன பள்ளிக்கு அனுப்பாம மாடு மேய்க்க அனுப்புனா.
தினம் அவன் மாடுகள ஓட்டிக்கிட்டு பக்கத்துல இருந்த மலைப்பக்கம் போவான்.அன்பரச இப்பிடி பள்ளிக்கூடம் அனுப்பாம மாடுமேய்க்க அனுப்புறத பத்தி அவனோட அப்பா தன்னோட ரெண்டாவது மனைவிகிட்ட கேக்கறதுக்கு பயந்தாரு.
ஒரு நாளைக்கு அன்பரசு மாடுங்கள ஓட்டிக்கிட்டு வழக்கமா போற மலைப்பக்கம் போனான்.அவுனுக்கு ரொம்ப பசிச்சிச்சு.சின்னம்மா சாப்பாடே அவுனுக்கு கட்டிக் கொடுக்கல.பசியோட அங்க இருந்த ஒரு சின்ன மேடையில அன்பரசு ஒக்காந்திருந்தான்.எதிரே பச்சைப்பசேல்ன்னு புல்வெளி.மாடுங்களெல்லாம் ஜாலியா மேஞ்சுக்கிட்டு இருந்திச்சிங்க.அப்ப புல்வெளில பளபளன்னு ஏதோ தெரிஞ்சத அன்பரசு பாத்தான்.அது என்ன தெரியுமா..? தங்க நிறத்துல ஒரு ஜோடி செருப்புங்க அங்க இருந்துச்சு.ஹை..சூப்பரா இருக்கேன்னு அத எடுத்து வெச்சுக்கிட்டான் அன்பரசு. சாயந்திரம் ஆயிடுச்சு.அதுவரைக்கும் அந்த செருப்ப யாரும் வந்து கேக்கல.
மாடுங்கள ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் அன்பரசு.அப்ப வழில ஒரு குள்ளன் ஒரு அடி உயரம்கூட அவன் இருக்க மாட்டன்.அவன் அன்பரசுகிட்ட அந்த புல்வெளில என்னோட தங்க செருப்புங்கள வெச்சிருந்தேன் அவற்றைக் காணல நீ பாத்தியா அப்பிடின்னு கேட்டான்.அன்பரசுக்கு பொய் சொல்வது பிடிக்காது.அதுனால ஆமாம் பார்த்தேன் இதோ அந்த செருப்புங்க அப்பிடின்னு எடுத்துக்கொடுத்தான்.ஆனாலும் ஐயா இந்த செருப்ப எனக்குத் தருவீங்களா?இத என் சின்னம்மாவிடம் கொடுத்தால் என்னைக் கொஞ்சம் அடிக்காமல் இருப்பார் என்று குள்ளனிடம் கெஞ்சிக்கேட்டான்.
குள்ளன்.. தம்பி இந்த செருப்புகள் இன்றி என்னால் இருக்க முடியாது.அனால் உனக்கு முக்கியமான நேரத்தில் நீ என்னை நினைத்துக்கொண்டால் உடனே வந்து உனக்கு உதவி செய்வேன் என்று சொல்லி சென்றுவிட்டான்.
வழக்கம்போல் சின்னம்மா அவனை அடித்துத் துன்புறுத்தினாள்.காய்ந்து போன ரொட்டித் துண்டுகளையே அவனுக்குச் சாப்பிடக்கொடுத்தாள்.அவன் அழுதபடியே இரவு தூங்கிப்போனான்.
மறு நாளும் அவன் மாடுகளைமேய்க்கும் போது புல்வெளியில் ஒரு சிகப்பு வண்ணக் குல்லாய் ஒன்று கிடப்பதைக்கண்டு அதனை எடுத்து வைத்துக்கொண்டான். குள்ளமான சிறுமி ஒருத்தி வந்து தக்க சமயத்தில் அவனுக்கு உதவுவதாகச் சொல்லி குல்லாவை வாங்கிச் சென்றாள்.
மூன்றாம் நாளும் அவன் மலையடிவாரத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டி இருந்த போது ஒரு வெள்ளிமணி ஒன்று கிடைத்தது. அதை ஆட்டி ஆட்டி அடித்தான் அன்பரசு.
வெகு தொலைவிற்குச் சென்று மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மணி சப்தத்தைக் கேட்டுஅன்பரசு நின்ற இடத்தில் வந்து கூடின.அவனுக்கு வேலை எளிதாயிற்று.
அனால் அங்கு வந்தமிகக் குள்ளமான கிழவன் ஒருவன் அது தனது மணி என்றும் தான் வனதேவதைகளின் தலைவன் என்றும் தக்க சமயத்தில் அவனுக்கு உதவுவேன் என்று சொல்லி அந்த மணியை வாங்கிக்கொண்டான்.ஆனால் அதற்கு பதிலாக ஊதுகுழல் ஒன்றை அன்பரசுவிடம் கொடுத்து..தம்பி உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் இந்த ஊதுகுழலை ஊது..உதவி கிடைக்கும்..ஏதாவது பெரும் துன்பம் என்றால் இந்த ஊதுகுழலை உடைத்துவிடு உதவ நானே வருவேன் என்று சொல்லிச் சென்றான்.
அன்பரசு அந்த ஊது குழலை மிக பத்திரமாக வைத்திருந்தான்.
நாளாக நாளாக சின்னம்மாவின் கொடுமை தாங்கமுடியாததாகிவிட்டது அன்பரசுக்கு.
ஒருனாள் அவன் ஊதுகுழலை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டான்.
கால்போன போக்கில் போனான்.ரொம்ப பசித்தது அவனுக்கு.இப்படியே ரொம்ப தூரக்க போனதும் அங்க ராஜாவோட அரண்மனை இருந்தத பாத்தான் அன்பரசு.அரண்மனை வாசல்ல இருந்த ஒரு காவலாளியிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் ஏதாவது வேல கொடுத்தா செய்யிறேன் எனக்கு சாப்பாடு குடுங்கன்னு கேட்டான்.காவலாளிக்கு இவன பாத்தா பாவமா இருக்கவே அரண்மனை ஆடுகளை மேய்க்கும் வேலைய இவனுக்கு வாங்கிக்கொடுத்தான்.
அந்த ராஜாக்கு ஒரு அழகான பொண்ணு இருந்தா.அவ ரொம்ப இரக்கம் உள்ளவள்.
அவ ஒரு ஆட்டுக்குட்டிய வளர்த்துவந்தா.அதையும் அன்பரசுகிட்ட கொடுத்து மேய்த்துக்கொண்டு வரச்சொன்னா.கொஞ்ச நாள்ளயே அன்பரசு எல்லார்ட்டயும் நல்ல பேர் வாங்கிட்டான்.
திடீர்ன்னு ஒரு நாள் என்னாச்சு தெரியுமா? குட்டீஸ்..ஒரு அரக்கன் வந்து இளவரசிய தூக்கிண்டு போய்ட்டான்.ராஜாவும் ராணியும் அழுதாங்க.நம்ம அன்பரசு ராஜாட்ட நாம் போய் இளவரசிய கண்டுபிடிச்சு அழச்சுண்டு வரேன் அப்பிடீன்னான்.இந்த சின்ன புள்ளையா கண்டுபிடிச்சு அழச்சுண்டு வரமுடியும்ன்னு மொதல்ல ராஜா நினச்சார்.
ஆனா என்ன நெனெச்சாரோ சரி அப்பிடின்னு சொல்லிட்டாரு.
அன்பரசு இளவரசிய கண்டுபிடிக்க இப்பிடீ போனான்.ஒரு கடல் கிட்ட போய்ட்டான்.
அந்த கடலுக்கு நடுவுல ஒரு மாளிக இருந்திச்சு.அதுக்குள்ளதான் இளவரசிய அந்த அரக்கன் ஒளிச்சி வெச்சிருப்பான்னு அவனுக்கு தோணிச்சு.ஒடனே சின்னம்மா வீட்டு மாடுங்கள மேய்க்கிறப்போ மொதல்ல ஒரு குள்ளன பாத்தானே அந்த தங்க கலர் செருப்ப எடுத்துக் குடுத்தானே அவன நெனெச்சான்.நெனெச்ச உடனேயே அந்த குள்ளன் அன்பரசு முன்னாடி வந்து நின்னான்.என்ன உதவி வேணும்ன்னு குள்ளன் அன்பரச கேட்டான்.அதோ தெரியுதே அந்த மாளிகைக்கு போகணும்ன்னான் அன்பரசு.ஒடனே
ஒரு பெரிய பறவையா மாறி அன்பரசுவ முதுகுல ஏத்திக்கிட்டு அந்த குள்ளன் அவன கடலுக்கு நடுவுல இருந்த மாளிகைக்குக் கொண்டுவிட்டுவிட்டு மறைந்து விட்டான்.
மாளிகையின் கீழே நின்றுகொண்டிருந்த அனபரசுவின் காதில் மாளிகையின் உச்சியிலிருந்த ஒரு அறையிலிருந்து இளவரசி அழும் குரல் கேட்டது.அவ்வளவு உயரம் தன்னால் ஏற முடியாது என்று நினைத்த அன்பரசு சிகப்புக் குல்லாய் குள்ளச் சிறுமியை நினைத்தான்.உடனே குள்ளச் சிறுமி அங்கு தோன்றினாள்.அவளும் ஒரு பறவையாய் மாறி அவனை அந்த மாளிகையின் உச்சிக்குத் தூக்கிச் சென்றாள்.பின் மறைந்து விட்டாள்.அன்பரசு இளவரசியை அங்கே பார்த்தான்.இளவரசி இவனைப் புரிந்து கொண்டாள்.அவளை அழைத்துக்கொண்டு மாளிகையை விட்டு எப்படிச் செல்வது?
கடலைத்தாண்டி அரண்மனைக்கு எப்படிப் போவது?என்று நினைத்த அன்பரசு ஊது குழலை இரண்டாக உடைத்தான்.உடனே குள்ளக் கிழவன் அன்பரசுவின் முன்னே தோன்றினான்.இளவரசியையும் அன்பரசுவையும் அம் மாளிகையின் கீழே அழைத்துவந்து சட்டென பெரிய மீனாக மாறி அவர்கள் இருவரையும் முதுகில் ஏற்றிக் கொண்டு கடலை நீந்தி கரையில் கொண்டு விட்டான்.அவனுகு நன்றி சொல்லிவிட்டு இருவரும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.
ராஜாக்கும் ராணிக்கும் மகளைப் பாத்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.அன்பரசுவுக்கு நன்றி சொல்லி நிறைய நிறைய நிறைய பொன்னும் வைரமும் பணமும் மாளிகைகளும் கொடுத்தனர்.இப்போ அன்பரசுவும் இளவரசியும் ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.அடிக்கடி மொதல்ல அன்பரசு மாடு மேய்ப்பானே அங்க வந்து வெளையாடுவாங்க.குட்டீஸ் நீங்களும் வரீங்களா?
அவங்களோட வெளையாட..நா அழைசுக்கிட்டுப் போறேன்.என்ன வரீங்களா?எதுக்கு இப்பிடி வரோம்னு கத்துறீங்க..?காது ஜவ்வு கிழிஞ்சிடும் போலருக்கு..
குட்டீஸ்..கத புடிச்சிருக்கா?கொஞ்சம் பெரியவங்களே உங்களுக்கு..?.. நன்றி..
{kunena_discuss:875}